இளம்பெண்ணின் தந்தையை தாக்கியவர் மீது வழக்கு…

published 5 months ago

இளம்பெண்ணின் தந்தையை தாக்கியவர் மீது வழக்கு…

கோவை; திருமணமானதை மறைத்து தொடர்பு வைத்திருந்ததை கண்டித்த இளம்பெண்ணின் தந்தையை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் 53 வயது நபர். இவரது 25 வயது மகளுக்கும், அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த வாலிபர் தனக்கு திருமணமானதை மறைத்து இளம்பெண்ணுடன் நெருங்கி பழகி வந்தார். அவரை திருமணம் செய்வதாக உறுதி அளித்துள்ளார். பின்னர் இருவரும் பாலியல் ரீதியாக தொடர்பு வைத்ததாக தெரிகிறது. 

அதன்பின்னர் திருமணம் செய்யாமல் இளம்பெண்ணை அந்த வாலிபர் ஏமாற்றிவிட்டார். இதுகுறித்து அந்த பெண்ணின் தந்தை ஊட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணகுமார் (32) என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கில் சரவணகுமாருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 

இதனை தொடர்ந்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்கிடையே அந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர் ஊட்டியில் இருந்து கோவை வந்து காளப்பட்டி பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், மீண்டும் சரவணகுமார் அந்த இளம்பெண்ணுடன் செல்போனில் பேசி வந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த இளம்பெண்ணின் தந்தை சரவணக்குமாரை எச்சரித்தார். இதுதொடர்பாக அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. 

இந்நிலையில், நேற்று முன்தினம் அந்த பெண்ணின் தந்தை நேருநகர் பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சரவணகுமார் அவரிடம் தகராறு செய்தார். இதில் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த சரவணகுமார் தகாத வார்த்தைகளால் பேசி அவரை தாக்கி மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில், போலீசார் சரவணகுமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe