கருமத்தம்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் உரசிச் சென்றதால் தகராறு: இருதரப்பினர் மோதலில் வாலிபர் கொலை

published 2 years ago

கருமத்தம்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் உரசிச் சென்றதால் தகராறு: இருதரப்பினர் மோதலில் வாலிபர் கொலை

கோவை: கோவை கருமத்தம்பட்டியை அடுத்த கணியூர் டோல்கேட் அருகே கடந்த 1-ஆம் தேதி பதுவம்பள்ளியைச் சேர்ந்த முகுந்த ராஜேஷ் (வயது 22) என்பவர் தனது 4 நண்பர்களுடன் நடந்து சென்றார்.

அப்போது, எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்த சுபாஷ் (22) என்பவர் அவர்கள் மீது உரசியபடி சென்றதாகத் தெரிகிறது. இதை முகுந்த ராஜேஷ் மற்றும் அவரது நண்பர்கள் தட்டிக்கேட்டனர். இதனால் 5 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது.

இதில் ஆத்திரம் அடைந்த முகுந்த ராஜேஷ் மற்றும் அவரது நண்பர்கள் சுபாஷை தாக்கினர். இதனால் கோபத்திலிருந்த சுபாஷ் மறுநாள் தனது நண்பர்களுடன் முகுந்த ராஜேஷ் தங்கியிருந்த அறைக்குச் சென்றார்.  அங்குத் தூங்கிக் கொண்டிருந்த முகுந்த ராஜேஷை அடித்து உதைத்துச் சென்றனர்.  இதில் முகுந்த ராஜேசுக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

பின்னர் முகுந்த ராஜேஷ் தனது நண்பர்களிடம் தலை சுற்றுவதாகக் கூறியுள்ளார். அவர்கள் முகுந்த ராஜேசின் பெற்றோருக்கு நடந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது  பெற்றோர் உடனே அன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முகுந்த ராஜேஷுக்கு சிகிச்சை அளித்தனர்.

அதன்பின்னர் அங்கிருந்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவருக்குத் தலையில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இதையடுத்து அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இதுகுறித்து முகுந்த ராஜேசின்  தந்தை  ராசு கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  புகாரின் பேரில் கருமத்தம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முகுந்த ராஜேஷ் மேல் சிகிச்சைக்காகக் கடந்த 16-ஆம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இந்நிலையில் தலைமறைவாக இருந்த சுபாசை கருமத்தம்பட்டி காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர். மேலும் அவரது நண்பர்களைத் தேடி வருகின்றனர்.

நம்ம ஊரு கனெக்‌ஷன்

உங்களால் கண்டுபிடிக்க முடிந்ததா? இந்த கனெக்‌ஷனுக்கான விடை அடுத்தடுத்த செய்திகளுக்குள் பதிவிடப்படும்...  

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe