கோவை: கோவை சித்தாபுதூர் பகுதியில் பா.ஜ.க அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பிரதமர் மோடியின் கோவை வருகை மக்களாலும், பா.ஜ.க வினராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
மோடியின் ரோடு ஷோவினை பிரமாண்ட முறையில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. நாளை மாலை 5.30 மணிக்கு சாய்பாபா காலணி பகுதியில் துவங்கும் பேரணி, 3 கி.மீ. கடந்து ஆர்.எஸ்.புரம் பகுதியில் நிறைவடையும் எனவும் பிரதமர் மோடிக்கு பா.ஜ.க வினரும், பொதுமக்களும் உற்சாகமாக வரவேற்பு தருவார்கள். இதில் கோவை மட்டுமின்றி அருகில் உள்ள சட்டமன்ற தொகுதியில் உள்ளவர்களும் கலந்து கொள்கிறார்கள் எனத் தெரிவித்தார்.
மோடியின் வருகையின் போது பராம்பரிய பொருட்கள் கண்காட்சி அமைக்கப்படும் என கூறிய அவர் ஆங்காங்கே மேடை அமைத்து சமுதாய தலைவர்கள் மற்றும் பயனாளிகளை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு மக்கள் பங்களிப்பு உடன் இந்த நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பிரதமர் மோடியை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பு இருப்பதால், இந்நிகழ்ச்சியில் இருபுறமும் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம் எனக் கூறினார்.
யாருக்கும் எந்த கட்டுப்பாடும் கிடையாது. இதற்கென தனியாக பாஸ் கிடையாது. இந்நிகழ்ச்சிக்கு வரும் பொதுமக்கள் 2 மணிக்கு முன்பு வந்து சேர வேண்டும்.
தேர்தல் தேதி அறிவிப்பில் கூட காங்கிரஸ், தி.மு.க விமர்சனம் செய்கின்றனர். பிரதமருக்கு தேர்தல் தேதி தெரிந்ததால் தான், தமிழகத்திற்கு வருவதாக சொல்கிறார்கள். தேர்தல் ஆணையத்தின் மீது அவர்கள் பழி போடுவது தேர்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொள்வதாக நாங்கள் பார்க்கிறோம். பிரதமர் மோடியை 28 பைசா என அழைக்க வேண்டுமென உதயநிதி சொல்லி உள்ளார். தமிழகத்திற்கு யு.பி.ஏ அரசாங்கத்தில் கொடுத்ததை விட அதிகமாக கொடுத்தவர் மோடி. பா.ஜ.க ஆளும் மாநிலங்களை விட தமிழகத்திற்கு அதிகமான சிறப்பு திட்டங்களை பிரதமர் தந்து உள்ளார். பிரதமர் மோடியை தரக்குறைவாக 28 பைசா என அழைப்போம் என்றால்,
ஜாபர் சாதிக் கூட தொடர்பில் இருந்த உதயநிதியை ட்ரக் உதயநிதி என அழைக்கலாமா?
ஒருபோதும் தரம் தாழ்ந்து விமர்சிப்பவர்கள் அல்ல. ஆனால் பிரதமரை விமர்ச்சிப்பவர்களுக்கு தக்க பதிலடி தருவோம்.
3 ஆண்டு கால தி.மு.க வின் ஆட்சி மோசமான ஆட்சி. தாங்க முடியாத சுமையில் மக்கள் தவித்து கொண்டு இருக்கிறார்கள். பத்து ஆண்டுகளாக பிரதமர் மோடி சிறப்பான ஆட்சி தந்து உள்ளார்.
இந்த தேர்தல் அடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என்பதை முடிவு செய்யும் தேர்தல். இண்டி கூட்டணி சுய நலத்திற்காக உருவாக்கப்பட்ட கூட்டணி. பிரதமர் நாட்டிற்காக உழைத்துக் கொண்டு இருக்கிறார். தமிழகத்தில் கூட்டணியை நிறைவு செய்யும் பணிகளில் தலைவர்கள் ஈடுபட்டு உள்ளனர். 19 ம் தேதி சேலத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் பங்கேற்கிறார்கள். தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு ஆகியவை இரண்டு மூன்று நாட்களில் நிறைவு பெறும். பிரமாண்டமான கூட்டணியை உருவாக்கி வருகிறோம் எனத் தெரிவித்தார்.
எங்கள் கட்சி வேட்பாளர்களை ஜெயிக்க வைக்க வேண்டும் என பணியாற்றி வருகிறோம்.
ஒரே கட்டமாக ஏன் தேர்தல் நடத்தவில்லை என்ற கமல்ஹாசனின் புரிதல் அரைகுறையானது. நடைமுறை எதார்த்தம் புரியாதவர் கமல்ஹாசன். மக்களை சந்திக்காமல் ராஜ்ய சபா சீட் வாங்கி உள்ளார்.
தேர்தல் பத்திரம் என்பது கருப்பு பண புழக்கத்தை ஒழிக்கவும், அரசியல் கட்சிகளுக்கு பெரிய அளவு நிதி அளிப்பதை தடுக்கவும் மோடி அறிமுகப்படுத்தினார். பா.ஜ.க வை விமர்சனம் செய்பவர்கள் மாநில கட்சி வாங்கியதை ஏன் விமர்சனம் செய்யவில்லை? வெளிப்படைத் தன்மை உள்ள அரசு மீது கலங்கம் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். அவர்களிடம் அதையே திருப்பி கேட்டால் பதில் இல்லை. பிரதமர் மோடி தமிழகத்தில் 30 சதவீதம் கட்சி நிகழ்ச்சிகளிலும், 70 சதவீதம் திட்டங்களையும் துவக்க வந்து உள்ளார். தமிழகத்திற்கு வருமாறு இரண்டு முறை அழைத்த விளையாட்டு துறை அமைச்சர், இப்போது அவர் வருகிறார், வருகிறார் என்கிறார்கள்.
கீழ்த்தரமாக பேசினால், கீழ்த்தரமான பதிலடி தான் வரும். அரசியல் ரீதியாக விமர்சனம் வையுங்கள். அண்ணாமலையை உள்நோக்கத்துடன் குறிவைத்து விமர்சனம் செய்கிறார்கள். சில நிறுவனங்கள் எல்லா கட்சிகளுக்கும் நன்கொடை தந்துள்ளார்கள். ரெய்டுகளுக்கு முன்பும் அவர்கள் நன்கொடை அளித்து உள்ளார்கள். அவர்களிடம் பணம் வாங்கி இருந்தால் ரெய்டுக்கு சென்றிருக்க கூடாது தானே? உலகத்திலேயே பெரிய கட்சி எங்கள் கட்சி. சில விஷயங்களை நீதிமன்றம் கேட்பதால் தருகிறோம். பா.ஜ.க வில் தினமும் மாற்றுக் கட்சியினர் சேர்கிறார்கள். கோவையில் பிரதமர் முன்னிலையில் மாற்றுக் கட்சியினர் கட்சியில் சேர வாய்ப்பு இல்லை எனத் தெரிவித்தார்.