கோவை அரசு மருத்துவமனையில் குழந்தையைக் கடத்த முயன்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண்: விசாரணைக்குப் பின் விடுதலை

published 2 years ago

கோவை அரசு மருத்துவமனையில் குழந்தையைக் கடத்த முயன்ற மனநலம் பாதிக்கப்பட்ட பெண்: விசாரணைக்குப் பின் விடுதலை

 

கோவை: கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் பிரசவ வார்டு உள்ளது. இங்குப் பிரசவத்திற்காகக் கோவை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில் கோவையை அடுத்த அன்னூரைச் சேர்ந்த பெண்ணிற்குக் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கோவை அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. நேற்று மதியம் அந்த ஆண் குழந்தையைத் தொட்டிலில் வைத்து விட்டு அந்த பெண் வெளியே சென்றார்.

அப்போது அங்கு வந்த பெண் ஒருவர் திடீரென்று அந்த பச்சிளம் ஆண் குழந்தையைத் தூக்கிக் கொண்டு வேகமாக வெளியே செல்ல முயன்றார். இதைப் பார்த்து சந்தேகம் அடைந்த மருத்துவமனை காவலாளிகள், அந்த பெண்ணைத் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவர்களிடம் அந்த பெண், அந்த குழந்தை தன்னுடையது எனக் கூறியுள்ளார்.

இதனிடையே வெளியே சென்ற குழந்தையின் தாய் திரும்பி வந்தார். அவர், தொட்டிலில் குழந்தை இல்லாததால் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார். மேலும் அங்கிருந்த மருத்துவ பணியாளர்களிடம் தனது குழந்தையைக் காணவில்லை என்று கூறினார். இதை அறிந்த காவலாளிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே அவர்கள் விரைந்து செயல்பட்டு தீவிரமாகத் தேடிக் குழந்தையைத் தூக்கிச் சென்ற அந்த பெண்ணை மடக்கிப் பிடித்தனர். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையை மீட்டுத் தாயிடம் ஒப்படைத்தனர்.

அதன் பின்னர் காவல்துறையினர் குழந்தையைக் கடத்த முயன்ற பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்தப் பெண் முன்னுக்குப் பின் முரணாகத்  தகவலைத் தெரிவித்தார். சந்தேகம் அடைந்த காவல்துறையினர் தொடர்ந்து அவரிடம் விசாரித்தனர். அதில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது.

அந்தப் பெண்ணை சுற்றிக்  காவல்துறையினர் மற்றும் பொது மக்கள் நிற்பதைப் பார்த்து ஒரு மூதாட்டி ஓடி வந்தார்.  அவர் காவல்துறையினரிடம் அந்தப் பெண் தனது மகள் எனவும்  தாங்கள் கோவை உடையார்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், தனது மகள் (ஆரோக்கியமேரி, வயது 32) கடந்த 15 வருடங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார்.

மேலும் விசாரணையில் ஆரோக்கியமேரி நேற்று மருத்துவமனையில் ஒரு தாய் தனது குழந்தைக்குப் பால் கொடுத்துக் கொண்டிருந்த போது அவரிடம் சென்று அந்தக் குழந்தை தன்னுடையது எனக் கூறி அவரிடமிருந்து குழந்தையைப் பிடுங்க முயற்சி செய்துள்ளார் என்பதும் இதைத் தொடர்ந்து அந்தக் குழந்தையின் குடும்பத்தினர் ஆரோக்கியமேரியைத் துரத்தி விட்டுள்ளதும் தெரிய வந்தது.

இதையடுத்து காவல்துறையினர் ஆரோக்கியமேரியை அவரது தாயாரிடம் ஒப்படைத்து, இனி இவ்வாறு நடக்காமல் பார்த்துக் கொள்ளும்படி அறிவுரைக் கூறி அனுப்பி வைத்தனர்.

கோவை அரசு ஆஸ்பத்திரியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பச்சிளம் குழந்தையைத் தூக்கிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe