வீட்டுக்குள் வளர்ப்பு நாயை வைத்து சீல் வைத்த வங்கி அதிகாரிகள்

published 2 years ago

வீட்டுக்குள் வளர்ப்பு நாயை வைத்து சீல் வைத்த வங்கி அதிகாரிகள்

கோவை: கோவை புலியகுளம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் பாபுகுமார் (வயது39), தொழில் அதிபர். இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு கோவையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வீட்டுக் கடன் பெற்றார். வாங்கிய வீட்டுக்கடனைக் குறித்த காலத்தில் செலுத்தவில்லை எனத் தெரிகிறது.

இதனால் அவரது வீடு ஏலத்துக்கு வந்தது. அப்போது வங்கி அதிகாரிகளிடம் வீட்டினைத் தானே வாங்கிக் கொள்வதாக பாபுகுமார் கூறியிருந்தார். ஆனால் அதனை வங்கி அதிகாரிகள் ஏற்காமல் ஏலத்தில் விட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாபுகுமார் கோவை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், பாபு குமாரின் வீட்டுக்கு நேற்று வங்கி அதிகாரிகள் காவல்துறையினருடன் வந்தனர்.

பின்னர் அவர்கள் வீட்டிலிருந்த அனைவரையும் வெளியேற்றி விட்டு, திடீரென வீட்டுக்குச் சீல் வைத்துள்ளனர். அப்போது வீட்டுக்குள் வளர்ப்பு நாய் ஒன்று இருந்துள்ளது. அப்போது தேவையான மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் நாயை வெளியில் கொண்டு வருவதற்கு அனுமதி கேட்டனர். ஆனால் அதிகாரிகள் அதற்கு மறுத்துவிட்டனர்.

இதுகுறித்து பாபுகுமார் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்தனர். பின்னர் வீட்டிலிருந்த நாயை மட்டும் 3 மணி நேரத்திற்குப் பிறகு வெளியில் கொண்டு வந்து உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

நாயை வீட்டிற்குள் அடைத்து வைத்த சம்பவம் குறித்து பீளமேடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe