கோவையில் சிறு குறு தொழில் கூடங்களின் போராட்டம் ஒத்திவைப்பு

published 1 year ago

கோவையில் சிறு குறு தொழில் கூடங்களின் போராட்டம் ஒத்திவைப்பு

கோவை: கோவை, தமிழகம் முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறு, குறுந்தொழில் கூடங்கள் உள்ளன. இங்கு 112 கிலோ வாட் மின்சாரத்தை பயன்படுத்துபவர்களுக்கு நிலைக்கட்டணமாக ரூ. 35 வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது 50 கிலோ வாட் வரை ரூ. 75 ஆகவும், அதற்கு மேல் ரூ.150 ஆகவும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ஆம் தேதியில் இருந்து வசூலிக்கப்பட்டு வருகிறது. 

இது தவிர பீக் அவர்ஸ் என்ற பெயரில் காலை 6 மணி முதல் 10 மணி, மாலை 6 மணி முதல் இரவு 10 மணி என்று கணக்கிட்டு, மின்கட்டணம் செலுத்தும் தொகையில் இருந்து 15 சதவீதம் பீக் அவர்ஸ் கட்டணத்தை வசூலித்து வருகிறார்கள். இதில் சில தொழிற்கூடங்கள் செயல்படாமல் இருந்தாலும் அவர்களுக்கும் பீக் அவர்ஸ் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே பல்வேறு பிரச்சினைகளால் குறுந்தொழில் கூடங்கள் பல மூடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மின்சாரக் கட்டணம் வசூலிப்பதில் இது போன்ற பிரச்சினை இருப்பதால் பல தொழில் முனைவோர்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அது போன்று சிட்கோ நிறுவனத்தின் சார்பில் நகர்ப்புறங்களில் செயல்பட்டு வரும் 24 தொழில் பேட்டையில் உள்ள தொழிற்கூடங்களை 99 வருடத்துக்கு குத்தகை அடிப்படையில் வழங்கலாம் என்று சிட்கோ அறிவித்துள்ளது.

இதனால் தொழில் முனைவோர்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே மின் கட்டணத்தில் பழைய நிலையை அமல்படுத்தக்கோரியும், சிட்கோவில் உள்ள தொழிற் கூடங்களுக்கு குத்தகை அடிப்படையில் வழங்குவதை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் உள்ள சிறு, குறுந்தொழில் கூடங்கள் கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து போராட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஜேம்ஸ், சுருளிவேல், சிவசண்முககுமார் ஆகியோர் கூறியதாவது:- 

"தமிழ்நாடு முழுவதும் உள்ள தொழில்துறையினர் மின் கட்டணத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து இன்று தொழில் கூடங்களை அடைத்து ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்து இருந்தோம். நேற்று குறு, சிறு நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசு, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் டான்சியாவின் மாநில நிர்வாகிகளை அழைத்து கோரிக்கைகள் சம்பந்தமாக பேசினர். 

கோரிக்கைகளுக்கு ஒவ்வொன்றாக தீர்வு காண்பதாக அமைச்சர்கள் உறுதி அளித்துள்ளனர். எனவே போராட்டத்தை தமிழகம் முழுவதும் ஒத்திவைப்பது என்று டான்சியா எடுத்த முடிவை கோவையில் இருக்கிற 22 தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான போசியாவும் ஏற்று இந்த போராட்டத்தை ஒத்தி வைப்பது என்று தீர்மானித்து உள்ளது. 

எனவே இன்று நடக்கவிருந்த தொழில் கூடங்களை அடைக்கும் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe