கோவையில் பாலியல் தொல்லையால் பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் ஆசிரியரின் மனைவியும் கைது

published 1 year ago

கோவையில் பாலியல் தொல்லையால் பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் ஆசிரியரின் மனைவியும் கைது

கோவை:

கோவையில் ஆசிரியரின் பாலியல் தொல்லையால் பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் ஆசிரியரின் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை உக்கடம் கோட்டைமேட்டை சேர்ந்த 17 வயது மாணவி பிளஸ் 2 படித்து வந்தார். இவர் கடந்த 2021ம் ஆண்டு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது அறையில் சோதனை செய்த போது, போலீசார் ஒரு கடிதத்தை கைப்பற்றினர்.

 அதில், மாணவி முன்பு படித்த தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி (35) தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாகவும், தலைமை ஆசிரியர் மீரா ஜாக்சன் மற்றும் மிதுனின் மனைவி அர்ச்சனாவிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அனைத்து மகளிர் போலீசார் மிதுன் சக்ரவர்த்தியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 ஆசிரியரின் பாலியல் தொல்லையால் மாணவி கடிதம் எழுதி விட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல்வேறு கண்டன குரல்கள் எதிரொலித்தன. அரசியல் கட்சியினர், அமைப்பினர் தற்கொலை செய்த மாணவியின் வீட்டுக்கு சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

 இதனைத்தொடர்ந்து மாணவி கடிதத்தில் மேலும் 2 பேர் மீதும் பாலியல் புகார் தெரிவித்திருந்தார். இதனையடுத்து கடிதத்தின் உண்மை தன்மை ஆராயப்பட்டது. அது மாணவியின் கையெழுத்து என உறுதியான நிலையில், மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிறுமி முன்னர் வசித்த பக்கத்து வீட்டுக்காரர்கள் மனோஜ்ராஜ் மற்றும் முகமது சுல்தான் ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் ஆசிரியர் மீது பாலியல் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத பள்ளி தலைமை ஆசிரியை மீரா ஜாக்சனும் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், 2 ஆண்டுகளுக்கு பின்னர் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி மனைவி அர்ச்சனாவை(32) கோவை மேற்கு அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் நேற்று கைது செய்தனர். அர்ச்சனாவும், தனது கணவர் பணிபுரிந்த அதே தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார். 

அப்போது மாணவி தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து அர்ச்சனாவிடம் புகார் அளித்துள்ளார். மேலும் செல்போனில் அர்ச்சனாவிடம் பேசும் ஆடியோவை போலீசார் சேகரித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அர்ச்சனா கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 அவர் மாணவி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டது தெரிந்தும் காவல் துறையில் புகார் அளிக்காததால் நடவடிக்கை எடுத்திருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe