பொள்ளாச்சி ரெயில் நிலையத்தை ரூ.6 கோடியே 33 லட்சம் செலவில் மேம்படுத்தும் பணிகள் தொடக்கம்….!!!!

published 1 year ago

பொள்ளாச்சி ரெயில் நிலையத்தை ரூ.6 கோடியே 33 லட்சம் செலவில் மேம்படுத்தும் பணிகள் தொடக்கம்….!!!!

கோவை : அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பொள்ளாச்சி ரெயில் நிலையத்தை ரூ.6 கோடியே 33 லட்சம் செலவில் மேம்படுத்தும் பணிகள் தொடங்கி உள்ளன. ரெயில் நிலையத்தை மேம்படுத்துதல்

பொள்ளாச்சியில் கடந்த 1915-ம் ஆண்டு ரெயில் நிலையம் தொடங்கப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த 2009-ம் ஆண்டு மீட்டர் கேஜ் ரெயில் பாதையை அகற்றி, அகல ரெயில் பாதையாக மாற்றப்பட்டது. இந்த பணிகள் முடிவடைந்து கடந்த 2015-ம் ஆண்டு முதல் ரெயில் போக்குவரத்து பொள்ளாச்சி வழித்தடத்தில் நடைபெற்று வருகிறது. பொள்ளாச்சி ரெயில் நிலையம் தொடங்கி நூற்றாண்டை கடந்தும் ரெயில் நிலையத்தில் எந்தவித வசதிகளும் மேம்படுத்தவில்லை என்று புகார் எழுந்தது.

இந்த நிலையில் தற்போது அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரெயில் நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் தொடங்கி உள்ளன. இதற்காக ரெயில் நிலைய வளாகத்தில் இருந்த பழைய கட்டிடங்கள் அகற்றப்பட்டு, அங்கு கிடந்த குப்பைகள், மீட்டர் கேஜ் பாதையின் போது பயன்படுத்திய தண்டவாளங்கள் உள்ளிட்டவற்றை அகற்றும் பணி நடந்து வருகிறது. 

மேலும் ரெயில் நிலைய கட்டிடம் இடிக்கப்பட்டு புதிதாக நவீன முறையில் புதிய கட்டிடம் கட்டப்படுகிறது. இதற்காக மேற்கூரைகள் பிரித்தெடுக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர். இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
 

ஒராண்டிற்குள் முடிக்க திட்டம் மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டம் என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட ரெயில்வே சந்திப்பு அல்லது ரெயில் நிலையங்களை தொலைநோக்கு பார்வையில் மேம்படுத்துதல் ஆகும். 

குறிப்பாக பயணிகளுக்கான இருக்கைகள், காத்திருப்பு அறைகள், கழிவறை வசதிகள், மேற்கூரைகள், சுத்தமான குடிநீர் வினியோகம், குளிரூட்டப்பட்ட பயணிகள் காத்திருப்பு அறை, ரெயில் வருகை மற்றும் புறப்பாடு குறித்த டிஜிட்டல் திரைகள் அமைக்கப்படுகின்றன. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகளும் இந்த திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன.

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் 1275 ரெயில் நிலையங்கள் நவீன மயமாக்கி மேம்படுத்தப்படுகிறது. இதில் தென்னக ரெயில்வேக்கு உட்பட்ட 6 ரெயில்வே கோட்டங்களில் தலா 15 ரெயில்நிலைய சந்திப்புகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. பணிகளை தொடங்கி ஒராண்டிற்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் மறு சீரமைத்தல் பணிக்கு ரூ.6 கோடியே 33 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தற்போது பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டு, ரெயில் நிலைய நடைமேடை மேற்கூரைகள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe