கோவை: கோவை பேரூர் பகுதியில், பாரதீய சன்னியாசிகள் சங்கம் சார்பில் நொய்யல் விழா நடைபெற்று வருகிறது. இதன் இரண்டாம் நாள் நிகழ்வில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:
இந்நிகழ்ச்சி ஒரு ஆன்மீக நிகழ்ச்சி என்பது மட்டுமல்லாமல் ஒரு தமிழ்யாக கலந்து கொள்கின்றேன். காவிக்கும் தமிழுக்கும் சம்பந்தமில்லை என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் காவியோடு சேர்ந்த ஆவியே தமிழ் தான் என்றும் பலருக்குத் தெரியாது.
ஆன்மீகத்தோடு தமிழை வளர்ப்பதற்காகவே பேரூர் ஆதீனம் நிறுவப்பட்டது. நூற்றாண்டுகளாக இவர்கள் தமிழை இங்கு வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழுக்காக கல்லூரி ஆரம்பிக்கப் போகிறோம் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள் கூட கல்லூரியை ஆரம்பிக்கவில்லை. இந்த பாரத தேசத்தில் நாம் ஆறுகளை வணங்கினோம் நதிகளை வணங்கினோம் கடல்களை வணங்கினோம், நிலவையும் வணங்கினோம், ஆனால் நாம் வணங்கிக் கொண்டிருந்த நிலவை இன்று இந்தியா அடைந்து அனைத்து நாடுகளும் இந்தியாவை வணங்கக்கூடிய ஒரு நிலை இன்று வந்திருக்கிறது என்றால் அது மெய்ஞானமும் விஞ்ஞானமும் கலந்தது தான்.
சந்திராயன் விண்ணில் பாய்வதற்கு முன்பு விஞ்ஞானிகள் கடவுளை வணங்கி விட்டு தான் சந்திராயனை அனுப்பினார்கள். அப்போது சிலர் "இது விஞ்ஞானம் தானே.. எதற்கு கோவிலில் வைத்து விட்டு கிளம்புகிறீர்கள்..?" என்று பரியாசைத்தார்கள்.
விஞ்ஞானமாக இருந்தாலும் மெய்ஞானமாக இறைவனின் சக்தி அனைத்திலும் இருக்க வேண்டும். அமெரிக்காவில் விண்வெளிக்குச் சென்றவர்கள் கூட அனுமனின் சிலையையே பாக்கெட்டில் வைத்திருந்தார்கள். ஒபாமா கூட அனுமன் சிலையை வைத்திருந்தார். எனவே உலகத்திற்கே இன்று நமது கடவுள்கள் தான் வழி காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
எனவே நமது பிரதமர் நாம் நிலவில் எங்கு சென்று அடைந்தோமோ அந்த இடத்தை சிவசக்தி என்று சொல்லி இருப்பது வாழ்க்கையில் நாம் எல்லாம் கேட்கக்கூடிய, தேனாறு வந்து பாய்ந்ததைப் போல. முகநூலில் பலரும் மக்களின் வரிப்பணத்தை கொண்டு தானே சந்திராயனை செலுத்தினீர்கள் அப்படி இருக்க எப்படி சிவ சக்தி என்று பெயர் வைக்க முடியும் என்ற கேள்வி எழுப்புகிறார்கள்.
கோவிலில் இருந்து வந்த பணத்தில் தானே அனைத்தையும் செய்கிறோம் அப்படி இருக்க நாங்கள் அதைக் கேட்க மாட்டோமா?. சாதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னி உங்களுக்கு வந்தால் ரத்தமா என்று கேட்பது போல் உள்ளது.
தமிழக கோயில்கள் பொருளாதாரத்தில் சிறந்தது. சாமி வேண்டாம், சாமியைப் பற்றிய தகவல்கள் வேண்டாம் பக்தி வேண்டாம் ஆனால் கோவில் உண்டியல் மட்டும் எனக்கு வேண்டும் என்று சிலர் நடந்து கொள்கிறார்கள். ஆன்மீகத்திற்கும் தமிழுக்கும் சம்பந்தமில்லை என்று சிலர் பேசுகிறார்கள்.
அப்படி இல்லை தமிழை வளர்த்தது ஆன்மீகம் ஆன்மீகத்தை வளர்த்தது தமிழ் என்பதில் நாம் அனைவரும் மிக தெளிவாக இருக்க வேண்டும். தமிழை வளர்த்த காவிக்கு நாம் மரியாதை செலுத்திக் கொண்டிருக்கிறோம் அதனால் தான் அது தமிழகத்தை தாண்டி டெல்லியில் செங்கோலாக அமர்ந்துள்ளது என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாடாளுமன்றத்தில் வேறு எந்த மாநிலத்திற்கும் இந்த பெருமை கிடைக்கவில்லை, எந்த மாநிலத்திற்கும் இப்படிப்பட்ட கொள்கைகள் இல்லை. மருத்துவரும் நொய்யல் ஆறும் ஒன்று, நோயை தீர்க்கும் நொய்யல். ஆனால் இன்று அந்த நொய்யல் ஆறு ஆக்கிரமிப்புகளாலும் பல்வேறு பொருட்கள் அதில் கலந்து கொள்வதாலும் இன்று அது மாசு பட்டிருக்கிறது.
கோதாவரி ஆறு என்றால் நாம் தெலுங்கானா விடமும் ஆந்திரா விடமும் நாம் சில நேரங்களில் விவாதம் செய்ய வேண்டி உள்ளது, காவிரி ஆறு என்றால் கர்நாடக உடன் விவாதம் செய்ய வேண்டி உள்ளது ஆனால் நொய்யல் நதி நமக்கு சொந்தமானது. பத்து மாதம் இந்த நொய்யல் ஆற்றில் தண்ணீர் இருக்கும் எனவே இது தாய்க்கு சமமானது.
தாய் தனது குழந்தையை பத்து மாதங்கள் தாங்குவது போல இந்த நொய்யல் பத்து மாதங்கள் தண்ணீரை தாங்கிக் தாங்கிக் கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் நம் நாட்டில் ஏதேனும் பிரச்சனை என்றால் அதற்கு தீர்வு காண மற்ற நாடுகளை நாடிக் கொண்டிருந்தது ஆனால் இன்று மற்ற நாடுகள் தீர்வுக்காக பாரத தேசத்தை நோக்குகின்ற மிகப்பெரிய பெருமையை நாம் இன்று பெற்றிருக்கிறோம்.
அப்படிப்பட்ட இந்த நேரத்தில் நாம் நதிகளை பாதுகாக்க வேண்டும். நாம் இந்த நதிகளை மீட்டெடுக்க வேண்டும். இத்தனை காவி உடை அணிந்தவர்கள் இங்கு இருக்கிறீர்கள் என்றால் இது ஒரு புண்ணிய ஸ்தலம். இன்று நொய்யலை நாம் நோய்வாய் படுத்தி ICU வில் படுக்க வைத்திருக்கிறோம். முன்பெல்லாம் நாம் காவிரி ஆறு தென்பெண்ணை ஆறு பாலாறு என்று பார்த்த இடங்களில் நாம் இன்று கண்ணீரோடு மணலை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
நாணல்களையும் ஆறுகளையும் எடுத்துக்காட்டி ஒரு மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் ஆள வேண்டும் என்பதை மகாபாரதத்திலும் கூறியிருக்கிறார்கள். அனைத்து ஆறுகளிலும் நாம் நமது அம்மா பெயரை தான் வைத்து இருக்கிறோம். ஆண் பெயர் உள்ள ஆறுகளை தேடிப் பார்த்தாலும் மிகவும் குறைவு. நெகிழிகளை இப்படியே விட்டு விட்டால் 2050 ஆம் ஆண்டு கடலில் மீன்களை விட நெகிழிகள் அதிகமாக இருக்கும் என கூறுகிறார்கள்.
இது ஆற்றிற்கும் கடலுக்கும் பொருந்தும். நெகிழிகள் ஆறுகள் மூலம் கடலுக்குச் சென்று விட்டு மீன் குடலுக்குள் சென்று விட்டு பின்னர் நமது குடலுக்கும் வருகிறது. பின்னர் கேன்சர் போன்ற நோய்களை நமக்கு அளிக்கிறது. நம் நாட்டில் விஞ்ஞானத்தை மட்டும் வைத்து சொன்னால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் அதனுடன் மெய்ஞானமும் சேர்த்து சொன்னால் ஏற்றுக் கொள்வார்கள்.
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன்
Youtube
சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!