கோவையில் பள்ளி சென்ற சிறுமியை கடத்தி ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டல்

published 1 year ago

கோவையில் பள்ளி சென்ற சிறுமியை கடத்தி ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவை: கோவையில் பள்ளிக்கு சென்ற சிறுமியை கடத்தி சென்று ரூ. 5 லட்சம் கேட்டு மிரட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை பீளமேடு பகுதியை சேர்ந்தவர் 45 வயது நபர். தனியார் நிறுவன ஊழியர். இவரது மகள் அங்குள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை சிறுமி பள்ளிக்கு சென்றார். பின்னர் மாலையில் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேட தொடங்கினர்.

ஆனால் அவரை காணவில்லை. இதற்கிடையே சிறுமியின் தந்தை வேலை பார்க்கும் தனியார் நிறுவனத்தின் உரிமையாளருக்கு செல்போன் அழைப்பு வந்துள்ளது. அதில், பேசிய அந்த சிறுமி தன்னை ஒரு நபர் கடத்தி செல்வதாகவும், பயமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் சிறுமியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தார்.

தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் அதே செல்போன் எண்ணுக்கு அழைத்து பேசினர். எதிர் முனையில் பேசிய நபர் சிறுமியை உங்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்றால் ரூ. 5 லட்சம் பணம் தர வேண்டும் என கேட்டு மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் இந்த சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீசில் புகார் அளித்தனர்.

அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும், சிறுமி பேசிய செல்போன் எண் சிக்னலை வைத்து விசாரணை நடத்தினர். அதில், சிறுமியை பணத்துக்கு ஆசைப்பட்டு கடத்தி சென்றது சிறுமியின் தந்தையுடன் வேலை பார்க்கும் கோவை வெள்ளலூர் முல்லை நகரை சேர்ந்த ராமசாமி(52) என்பது தெரியவந்தது.

போலீசார் கோவையில் பதுங்கியிருந்த ராமசாமியை கைது செய்தனர். அவரிடம் இருந்த சிறுமியை மீட்டு போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பணத்துக்கு ஆசைப்பட்டு தன்னுடன் வேலை பார்ப்பவரின் மகளையே கடத்திய சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe