செட்டிபாளையத்தில் வழக்கறிஞர் வெட்டி கொலை; 4 பேர் சரண்!

published 6 months ago

செட்டிபாளையத்தில் வழக்கறிஞர் வெட்டி கொலை; 4 பேர் சரண்!

கோவை: கோவையில் வழக்கறிஞர் வெட்டி கொல்லப்பட்ட வழக்கில் 4 பேர் போலீசில் சரண் அடைந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை ரத்தினபுரி விஸ்வநாதபுரத்தை சேர்ந்தவர் உதயகுமார்(48). வழக்கறிஞர். இவரை நேற்று அவரது காரில் அழைத்து சென்ற 4 பேர் கொண்ட கும்பல், செட்டிபாளையம் மயிலேறிபாளையத்தில் உள்ள ஒரு கோழிப்பண்ணை அருகே அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.

பின்னர் வழக்கறிஞரின் காரிலேயே தப்பி சென்றனர். பெண் விவகாரத்தில் இந்த கொலை நடந்ததாக கூறப்பட்டது. சம்பவ இடத்தில் கோவை மாவட்ட எஸ்.பி.பத்ரிநாராயணன் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

மேலும் தடயவியல் துறையினரும் அங்கு சென்று தடயங்களை சேகரித்தனர். இது குறித்து செட்டிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கொலையாளிகளை பிடிக்க 6 தனிப்படை அமைத்து எஸ்பி பத்ரிநாராயணன் உத்தரவிட்டார். தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில், நேற்று இரவு வழக்கறிஞர் உதயகுமார் கொலை தொடர்பாக 4 பேர் கோவில்பாளையம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். விசாரணையில், உதயகுமார் பைனான்ஸ் அதிபர் ஒருவரிடம் சில லட்சங்கள் பணம் வாங்கியதாகவும், அதனை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ததாகவும் தெரிகிறது.

ஆனால் அந்த பணத்தை பைனான்ஸ் அதிபருக்கு திருப்பி கொடுப்பதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. 4 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

அதில் ஒருவர் பைனான்ஸ் அதிபர் என்பதும், மீதமுள்ள 3 பேர் பைனான்ஸ் கலெக்சன் ஊழியர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் பணப்பிரச்னை மட்டும்தான் இந்த கொலைக்கு காரணமா? அல்லது வேறு விவகாரமும் இதில் உள்ளதா? என போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe