கோவை: தமிழக அரசின் மின் கட்டணம் மற்றும் வீட்டு வரி உயர்வைக் கண்டித்து அதிமுக சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதிமுக கோவை மாநகர் மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் அர்ச்சுனன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், தாமோதரன், ஏ.கே.செல்வராஜ், ஜெயராமன், கந்தசாமி, அமுல் கந்தசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமி உட்பட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, "கடந்த ஒன்றரை ஆண்டில் திமுக எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. ஆனால் மின்கட்டணம் மற்றும் வீட்டு வரியை உயர்த்தாமல் இருந்தாலே மக்கள் நிம்மதியாக இருப்பார்கள்.
அதிமுக ஆட்சியில் வாரம் தோறும் ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடத்தி மருந்து தெளிப்பு உள்ளிட்ட பணிகளை முடுக்கிவிடிவோம். ஆனால் இன்று ஒன்றும் செய்வதில்லை. எனக்கும் மு.க.ஸ்டாலினுக்கும் என்ன இருக்கிறது. எதற்காக என் வீட்டில் மூன்று முறை ரெய்டு நடத்தினார்கள்?
அம்மா இறந்த பிறகு குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க ஸ்டாலின் முயன்றபோது நான் உள்ளிட்டவர்கள் உடனிருந்து எடப்பாடியை முதல்வராக்கினோம். ஆட்சியைக் காப்பாற்றினோம். கூட்டணி அமைவதற்கும் முக்கிய காரணமாக இருந்தேன். என் கட்சியின் ஆட்சியைக் காப்பாற்ற உணர்வுப் பூர்வமாகச் செயல்பட்டோம். எத்தனை வழக்குகள் போட்டாலும் அஞ்ச மாட்டேன். என் வீட்டில் மூன்று முறை ரெய்டு நடத்தி என்ன எடுத்தீர்கள்?
பத்து ஆண்டுகள் கட்டப்பஞ்சாயத்து இல்லை, லஞ்சம் இல்லை, மக்களுக்குப் பாதுகாப்பாக இருந்தோம். என் வீட்டில் ரெய்டு நடந்தபோது காவல்துறையினர் நடந்த விதம் வருத்தம் அளிக்கிறது. கோவை மாநகர காவல் துணை ஆணையர் எம்.எல்.ஏக்களை கையைப் பிடித்து இழுத்து அத்துமீறியுள்ளார். தொண்டர்களை குண்டுக்கட்டாகத் தூக்கி கைது செய்துள்ளனர் காவல் துறையினர். யார் இந்த அதிகாரத்தைக் கொடுத்தது. கைக்கூலியாக அடிமையாக உள்ளது காவல்துறை.
எங்கள் சகோதரர்கள் மீது கை வைத்தவர்கள் சட்டையைக் கழட்டாமல் விட மாட்டோம். கொள்ளை கற்பழிப்பு போன்றவற்றைத் தடுக்க காவல்துறைக்குத் தைரியம் இல்லை. காவல் துறை அத்துமீறலுக்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
மு.க.ஸ்டாலின் என்ன கடவுளா? இவரைப் போல் எத்தையோ பேர் முதல்வராக வந்துள்ளனர். ஆனால் இவ்வளவு மோசமான பழிவாங்கும் வஞ்சகர்கள் இருந்ததில்லை. கொலுசு மற்றும் பணம் கொடுத்து ஓட்டு வாங்கி இன்று எவ்வளவு வரியை உயர்த்தியுள்ளனர். குழந்தைக்குப் பொம்மை வழங்குவது போல் பணம் வழங்கி இன்று வரியை உயர்த்தியுள்ளனர்.
திமுக அமைச்சர்கள் இன்று லஞ்சம் வாரிக் குவிக்கின்றனர். கந்துவட்டி போல் வசூலிக்கின்றனர். 50000 கோடிக்கு மேல் ஸ்டாலின் குடும்பம் சம்பாதித்துள்ளது. யார் யாரிடம் வாங்கினீர்கள் என்பது எங்களுக்கும் தெரியும், சும்மா விட மாட்டோம்.
கோவை மாநகர துணை ஆணையர் சிலம்பரசன் தன்னை சினிமா சிம்பு மாதிரி நினைத்துள்ளார். கட்சி பெண்களையும் வழக்கறிஞர்களையும் தொட உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள். நாங்கள் ஆட்சியிலிருந்தபோது காவல்துறைக்கு எவ்வளவு மரியாதை கொடுத்தோம்?
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கோவைக்கு என்ன செய்தார்கள். கோவையில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களின் பட்டியலிட்டு, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தைக் கிடப்பில் போட்டு விட்டனர். எந்த வேலையையும் திமுக அரசு செய்யவில்லை. சாலைகள் போட மாநகராட்சி நிர்வாகத்திற்கு வக்கில்லை. ஆட்சியர் பொம்மைபோல் உள்ளார்.
திமுகவுக்கு ஒரே கொள்கை கொள்ளை அடிப்பது மட்டுமே. எந்த திட்டமும் செய்யாத அரசாக உள்ளது. நான்கு ஆண்டு எடப்பாடி சிறப்பான ஆட்சியைத் தந்தார். மக்களைப் பற்றிக் கவலைப்படாத அரசு கட்டுமான அப்ரூவல் ஜி ஸ்கொயருக்கு மட்டும் வழங்கப்படுகிறது. கூட்டணிக் கட்சிகள் உட்பட இன்று எந்த தரப்பும் நன்றாக இல்லை. மீடியாவை மிரட்டி வருகிறார்கள்.
நீதிபதிகள் சிறப்பாகச் செயல்பட்டாலும் அவர்களையே மிரட்டக்கூடியவர்கள் திமுகவினர். மீடியா ஸ்டாலினைக் கைவிட்டால் ஆட்சி முடிந்து விடும். பாராளுமன்ற தேர்தலில் நாற்பது தொகுதிகளிலும் அதிமுக வெல்லும். சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிக்கு மேல் வென்று அதிமுக ஆட்சியமைக்கும்.
இதற்கு மேலாவது உயர்த்திய மின் கட்டணத்தை நிறுத்தி வையுங்கள். விசைத்தறியாவார்கள் இன்று வேலை நிறுத்தம், ஆனால் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. திமுக-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் கணவரே திமுக ஆட்சி பற்றிப் பேட்டியளித்துள்ளது இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.
மின் கட்டண உயர்வை நிறுத்த வேண்டும். நாங்கள் டெண்டர் விட்ட சாலைப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ நிதியையும் கடந்த ஆறு மாதமாக நிறுத்தி வைத்துள்ளனர். அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவிற்கு காவல்துறையினர் நெருக்கடி தராதீர்கள்."
இவ்வாறு அவர் பேசினார்.