ஆனைமலை, கிணத்துக்கடவு பெரியார் நினைவு சமத்துவப்புரங்களில் பழுதுபார்ப்பு பணி: கலெக்டர் சமீரன் ஆய்வு

published 2 years ago

ஆனைமலை, கிணத்துக்கடவு  பெரியார் நினைவு சமத்துவப்புரங்களில் பழுதுபார்ப்பு பணி: கலெக்டர் சமீரன் ஆய்வு

 

கோவை: கோவை மாவட்டம், ஆனைமலை ஊராட்சி ஒன்றியம், தென்சங்கம்பாளையம் ஊராட்சியில் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள வீடுகள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது பொள்ளாச்சி துணை ஆட்சியர் திருதாக்கரேசுபம் ஞானதேவ்ராவ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் கவிதா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அனைத்து மக்களும் சாதி மத பேதமின்றி சமமாக வாழ்ந்திடப் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் பெயரில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தக் குடியிருப்புப் பகுதியில் வணிக மையங்கள், விளையாட்டு மைதானங்கள், பொது இடங்கள், பூங்காக்கள், படிப்பகங்கள் என பல்வேறு வசதிகள் செய்யப்படுகின்றது.

அந்த வகையில் கோவை மாவட்டத்தில் ஆனைமலை வட்டாரம் தென்சங்கம்பாளையம் ஊராட்சி, கிணத்துக்கடவு வட்டாரம் வடசித்தூர் ஊராட்சி, மதுக்கரை வட்டாரம் செட்டிபாளையம் பேரூராட்சி, எஸ்.எஸ் குளம் வட்டாரம் வெள்ளைகிணறு ஆகிய இடங்களில் சமத்துவபுரங்கள் உள்ளன. கோவை மாவட்ட சமத்துவபுரங்கள் மறுசீரமைப்பு செய்தல் பகுதி 1 திட்டத்தின் கீழ் 4 சமத்துவபுரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஆனைமலை வட்டாரம் தென்சங்கம்பாளையத்தில் ரூ.30 லட்சம் மதிப்பில் 78 வீடுகளும், கிணத்துக்கடவு வட்டாரம் வடசித்தூரில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் 90 வீடுகளும், மதுக்கரை வட்டாரம், செட்டிபாளையம் பேரூராட்சியில் ரூ.32.50 லட்சம் மதிப்பீட்டில் 65 வீடுகளும், சர்க்கார் சாமக்குளம் வட்டாரம் வெள்ளகிணறு பகுதியில் ரூ.43 லட்சம் மதிப்பில் 80 வீடுகளும் என மொத்தம் 319 வீடுகள் ரூ.100 கோடி மதிப்பீட்டில் பழுதுபார்ப்பு பணிகள் தலா ரூ.50,000 மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் 72 வீடுகளின் பழுதுபார்ப்பு பணிகள் முடிவுற்ற நிலையில் மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், கிணத்துக்கடவு வட்டாரம் வடசித்தூர் ஊராட்சியில் ரூ.9.87 லட்சம் மதிப்பீட்டில் 8 வீடுகளும், மதுக்கரை, செட்டிபாளையம் பேரூராட்சியில்  2 வீடுகளும் என மொத்தம் ரூ.18.87 லட்சம் மதிப்பீட்டில் 10 வீடுகள் மறுசீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த சமத்துவபுரங்களில் 2 குடிநீர் வழங்கல் பணிகள், 4 சாலைப்பணிகள், 45 தெருவிளக்குப் பணிகள், ஒரு விளையாட்டு மைதானம், 4 சமுதாய நலக்கூடங்கள், 2 நூலக கட்டிடங்கள், ஒரு அங்கன்வாடி கட்டிடம், 3 நியாய விலைக்கடைகள், 3 தந்தை பெரியார் சிலைகள், 3 சமத்துவபுர நுழைவு வாயில்கள் என மொத்தம் ரூ.93.71 லட்சம் மதிப்பீட்டில் 58 உட்கட்டமைப்பு சீரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றது.

அதன்படி, கோவை மாவட்டத்தில் உள்ள தென்சங்கம்பாளையம் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள வீடுகள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்றுவருவதை மாவட்ட ஆட்சியர் சமீரன்  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வீடு புனரமைப்பு பணிகள் முடிவுற்ற வீடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, புனரமைப்பு பணிகளின் விவரம், முடிக்கப்பட்ட பணிகளின் தரம் மற்றும் அதன் மதிப்பீடு குறித்துக் கேட்டறிந்தார்.

இதுகுறித்து மீனாட்சி என்பவர் கூறும்போது, "நான் குடியிருக்கும் இந்த வீட்டின் மேற்கூரையில் சில இடங்களில் விரிசல் இருந்தது. இதனால் மழைபெய்யும்பொழுது தண்ணீர் வீட்டினுள் ஒழுகும். வருமானமின்றி வயதானவர்களாக இருக்கும் எங்களால் அதைச் சரிசெய்யும் பொருளாதார வசதி இல்லை. எனக்கு இருதய நோய் உள்ளது. வேலைக்குச் செல்ல இயலவில்லை. முதியோர் ஓய்வூதியத்தொகையைக் கொண்டு வாழ்க்கை நடத்தி வருகிறேன். பெரியார் நினைவு சமத்துவபுரம் வீட்டுப் பராமரிப்புத் திட்டத்தின் கீழ் வீட்டினை சரிசெய்ய ரூ.50,000 ஒதுக்கீடு செய்து மேற்கூரையைச் சரிசெய்து பழுதான சுவர்களில் சிமெண்ட் பூச்சு வேலை செய்யப்பட்டது. இப்போது என் வீடு மழையின்போது ஒழுகுவது இல்லை. நாங்கள் இப்போது சந்தோஷமாக இருக்கிறோம். எங்கள் வீட்டைப் புதுப்பித்துத் தந்ததற்கு நன்றி." என்றார்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe