கோவையில் நர்சிங் மாணவியை வீடு புகுந்து கத்தியால் குத்திய லாரி டிரைவர்

published 2 years ago

கோவையில் நர்சிங் மாணவியை வீடு புகுந்து கத்தியால் குத்திய லாரி டிரைவர்

கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வீரபாண்டியைச் சேர்ந்தவர் 21 வயதான 3-ம் ஆண்டு நர்சிங் படிக்கும் மாணவி. அவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு இவரது உறவினரான நெல்லை மாவட்டம் ராதாபுரத்தை சேர்ந்த ஜெனித் (வயது 25), லாரி டிரைவர், என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் சந்தித்தும் செல்போனில் பேசியும் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.
இந்த நிலையில் ஜெனித்துக்கு தனது காதலியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. அவர் தனது காதலியை செல்போன் மூலமாக தொடர்பு கொள்ளும் போது அவர் வேறு யாருடனாவது பேசிக்கொண்டு இருந்தால் யாருடன் பேசுகிறாய் என சந்தேகப்பட்டுக் கேட்பார். இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு அவர்களது காதல் முறிந்தது. இதன் காரணமாக மாணவி தனது காதலனுடன் பேசுவதையும் பழகுவதையும் கடந்த 1 மாதமாக தவிர்த்து வந்தார்.
இது ஜெனித்துக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியது. இந்த காதல் விவகாரம் குறித்து அவர் தனது தந்தையிடம் கூறினார். மேலும் தனது காதலியைத் திருமணம் செய்து வைக்கும்படி கூறினார். இதனையடுத்து ஜெனித் கடந்த 3-ம் தேதி தனது தந்தையுடன் கோவைக்கு வந்தார். பின்னர் மாணவியின் வீட்டிற்குச் சென்று பெண் கேட்டார். ஆனால் மாணவி திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். இதனையடுத்து ஜெனித் தனது தந்தையுடன் வெளியே சென்றார்.
தன்னுடைய காதலி தன்னை திருமணம் செய்ய மறுத்து விட்டதால் அவர் மீது ஆத்திரம் கொண்டு தனக்குக் கிடைக்காத அவள் யாருக்கும் கிடைக்கக் கூடாது என முடிவு செய்தார். அதன்படி மாணவியைக் கொலை செய்யத் திட்டமிட்டார்.
சம்பவத்தன்று ஜெனித் கத்தியுடன் மாணவியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து மாணவியின் முதுகு , கை, கால், வயிறு ஆகிய பகுதிகளில் கத்தியால் குத்தினார். இதனைப் பார்த்த மாணவியின் அக்கா, அவரது கணவர் மற்றும் சித்தி ஆகியோர் ஜெனித்தை தடுக்க முயன்றனர். அவர்களையும் ஜெனித் கத்தியால் குத்தினார்.
இந்த சம்பவத்தின் போது ஜெனித்துக்கும் கத்திக்குத்து காயம் ஏற்பட்டது. கத்திக்குத்தில் காயம் அடைந்த மாணவி உள்பட அனைவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது குறித்து மாணவி கொடுத்த புகாரின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் போலீசார் ஜெனித் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe