கோவை மாவட்டத்தில் இன்று 183 மருத்துவமனையில் கொரோனா தடுப்பு ஒத்திகை

published 1 year ago

கோவை மாவட்டத்தில் இன்று 183 மருத்துவமனையில் கொரோனா தடுப்பு ஒத்திகை

கோவை: கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளில் இன்றும், நாளையும் கொரோனா தடுப்பு குறித்து ஒத்திகை மேற்கொள்ள மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. 

அதன் ஒரு பகுதியாக இன்று கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா வந்தால் அணுக தேவையான மாதிரி புறநோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கை, சிகிச்சைக்கு பின் நோயாளிகளை கண்காணிப்பில் வைக்கும் சாதாரண வார்டு உள்ளிட்டவை தற்காலிகமாக அமைக்கப்பட்டது. திடீரென தொற்று பாதிக்கப்பட்டு ஒருவர் அனுமதியானால், அவரை அணுக வேண்டிய நடைமுறை, சிகிச்சை குறித்தும், வழிகாட்டுதல் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும் அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு உடல் வெப்பநிலை சரிபார்ப்பு, ஆக்ஸிஜன் அளவு, அதன் பின்னர் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கோவை அரசு மருத்துவமனையில் நடந்த ஒத்திகையை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி பார்வையிட்டார்.

இதில், மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் அருணா, மருத்துவமனை டீன் நிர்மலா, மருத்துவர்கள், செவிலியர்கள் ஊழியர்கள் என பலர் பங்கேற்றனர். இந்த ஒத்திகை கோவை அரசு மருத்துவமனை மட்டுமின்றி, இ. எஸ். ஐ மருத்துவமனை மற்றும் 89 அரசு ஆரம்ப சுகாதார நிலையம், 92 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 183 மருத்துவ மனைகளில் கொரோனா தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

கோவை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் ஆட்சியர் கிராந்தி குமார்பாடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

"கொரோனா தொற்று சிகிச்சை தொடர்பாக மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது குறித்த ஒத்திகை பயிற்சி அரசு மருத்துவமனையில் நடந்தது. இதை பார்வையிட்டு நான் ஆய்வு செய்தேன். 

கோவை மாவட்டத்தில் தற்போது வரை 113 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவையில் தேவையான மருத்துவ உள்கட்ட மைப்பு வசதிகள் தயார் நிலையில் உள்ளது. இங்கு பெரியளவில் கொரோனா பாதிப்புகள் இல்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். மருத்துவமனைக்கு செல்வோர் பொதுமக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும்.

2 டோஸ் தடுப்பூசி செலுத்தினால் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும். இணை நோய் பாதிப்பு உள்ளவர்கள் முககவசம் அணிந்து பாதுகாப்புடன் இருக்க வேண்டும். பொதுமக்கள் முககவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கைகளை சோப்பு போட்டு கழுவுவது போன்ற வழிகாட்டு முறைகளை கடைபிடிக்க வேண்டும். 

மாவட்டத்தில் கொரோனா அறிகுறிகளுடன் வரும் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி தினமும் 300 முதல் 400 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்து வருகிறோம். மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதிகள் தேவைக்கு ஏற்ப உள்ளது. இ. எஸ். ஐ. மருத்துவமனையில் சி. எஸ். ஆர் நிதி மூலம் 16 ஆக்சிஜன் பிளான்ட்கள் அமைக்கப்பட்டுள்ளதால் ஆக்சிஜன் பற்றாக்குறைக்கு வாய்ப்பில்லை. கோவையை பொறுத்தவரை மருத்துவ கட்டமைப்புகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன." இவ்வாறு அவர் கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe