கள்ளச்சாராய விற்பனை நடைபெறுகிறது: பொள்ளாச்சி ஜெயராமன் குற்றச்சாட்டு…

published 7 months ago

கள்ளச்சாராய விற்பனை நடைபெறுகிறது: பொள்ளாச்சி ஜெயராமன் குற்றச்சாட்டு…

கோவை: மாவடப்பு பகுதியில் நீண்ட நாட்களாக கள்ளச்சாரையை விற்பனை நடைபெறுவதாக பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் குற்றம் சாட்டியுள்ளார்.

உடுமலைப்பேட்டை அருகே உள்ள மாவடப்பு பகுதியில் மது அருந்தியதில் இருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று முன் தினம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அதனை தொடர்ந்து நேற்றைய தினம் அவர்கள் கோவையில் உள்ள இரண்டு தனியார் மருத்துவமனைகளில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் காந்திபுரம் பகுதியில் உள்ள ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மகேந்திரன் என்பவரை பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமன் வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன்,

நீண்ட நாட்களாக அப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்று வந்திருப்பது காவல்துறையினருக்கு தெரிய வந்தும் அதனை தடுக்காமல் ஏன் விட்டுவிட்டார்கள்?.

மாவடப்பு என்பது ஆதிவாசி மக்கள் வசிக்கின்ற கிராமம் அங்கிருந்து சாராயம் கொண்டு வந்து குடித்ததன் மூலம் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. அதில் உடல்நிலை தேறிய நான்கு பேரை தாங்கள் பார்த்தோம் ஒருவர் கவலைக்கிடமான நிலைமையில் அனுமதிக்கப்பட்டுளளார்.

இது போன்று ஒரு வேதனையான சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் நடைபெற்று உள்ளதாக தெரிவித்த அவர் காவல்துறை உயர் அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி இருக்க வேண்டும் என  தெரிவித்தார்.

இப்படிப்பட்ட சூழலில் எப்படி வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு தொழில் துவங்குவார்கள்? என கேள்வி எழுப்பிய அவர், உழைக்கும் தொழிலாளர்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருப்பதாகவும் கஞ்சா அபின் போன்ற போதை வஸ்துக்கள் மெத்தபெட்டோமேன் போன்ற போதை வஸ்துக்கள் இங்கு அதிகமாக புழங்குவதால் மக்கள் உயிருக்கு பாதுகாப்பாற்ற சூழல் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

இதையெல்லாம் தடுத்து நிறுத்தினால் தான் வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு தொழில் துவங்க முடியும் என கூறினார்.

தமிழ்நாடு காவல்துறை மிகவும் வலிமையானது ஆற்றல் மிக்கது, திறமையான அதிகாரிகளுக்கு முக்கியமான இடங்களில் வாய்ப்பு அளித்து சுயமாக செயல்பட விட்டாலே இது போன்ற சம்பவங்கள் நடைபெறாது. அவரவர்களுக்கு வசதியான ஸ்டேசன்களை வாங்கிக் கொண்டு வந்து அமர்ந்து கொண்டு ஆளுங்கட்சியினருடன் இணைந்து செயல்படுவதால் தான் இது போன்ற சம்பவங்கள் நடப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

இனிமேலாவது இதையெல்லாம் திருத்த வேண்டும் அல்லது நாட்டு மக்கள் திருத்துவார்கள் என்பதை கூறுவதற்கு கடமைப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

போதை வஸ்துக்களின் சாம்ராஜ்யம் தமிழகத்தில் தலையெடுக்காமல் ஒடுக்கப்பட வேண்டும் வேண்டும் எனவும் கூறினார். பல்வேறு காவல் நிலையங்களில் இருந்து காவலர்கள் இந்த மருத்துவமனைக்கும் கே எம் சி ஹெச் மருத்துவமனைக்கும் வந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சென்ற வாரம் பொள்ளாச்சியில் வெளிநாட்டு மதுபானங்கள் வேறு நாட்டில் இருந்து கடத்திவரப்பட்ட மதுபானங்கள் கைப்பற்றப்பட்டதை குறிப்பிட்ட அவர் அதேபோல் இதுவும் நடைபெற்றுள்ளதாக தெரிவித்தார்.

இவற்றையெல்லாம் முதலிலேயே சரி செய்திருக்க வேண்டும் என தெரிவித்த அவர் கண் கட்டிய பின்னால் சூரிய நமஸ்காரம் கூடாது என தெரிவித்தார். மேலும் ஏழை எளிய மக்களின் காதில் ஸ்டாலின் அரசு பூ சுற்றுவதாகவும் விமர்சித்தார். காவல்துறை தரப்பில் பூச்சிக்கொல்லி மருந்து உட்கொண்டதாக கூறுவது குறித்து கேள்வி எழுப்பியதற்கு இன்னும் வினோதமான கற்பனை பதில்கள் எல்லாம் வரும் எனவும் சினிமாவில் வராத கதை வசனங்களை எல்லாம் ஜோடித்துக் கூறுவார்கள் எனவும் அதையெல்லாம் மக்கள் நம்ப மாட்டார்கள் இதையெல்லாம் நினைத்து மக்கள் உள்ளுக்குள் சிரித்துக் கொள்வார்கள் மக்களுக்கு சரியான நேரம் வரும் பொழுது இவர்களுக்கு ஆப்படிப்பார்கள் என தெரிவித்தார்.

அரசு மதுபானங்களின் விலையை இந்த மூன்று ஆண்டுகளில் பன்மடங்கு உயர்த்தி உள்ளதாக தெரிவித்த அவர் இதன் காரணமாகத்தான் மதுபானங்களை வாங்க முடியாதவர்கள் கள்ள சாராயத்தை நாடி செல்வதாக தெரிவித்தார். மேலும் மதுபான விற்பனை அனைத்தும் ஆளுங்கட்சிக்கு சார்ந்ததாக இருக்கிறது எனவும், மதுபான விற்பனையாளர்கள் உற்பத்தியாளர்கள் என அனைவரும் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களாக இருப்பதாக விமர்சித்தார்.

தி.மு.க ஆட்சிக்கு வந்தால் அனைத்து மதுபான கடைகளையும் மூடுவதாக சொல்லினார்கள் என தெரிவித்த அவர் இன்றைய முதலமைச்சரும் அன்றைய எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் குடும்பத்துடன் கருப்பு சட்டை அணிந்து முந்தைய ஆட்சி நடக்கும் பொழுது ஆர்ப்பாட்டத்தை எல்லாம் மேற்கொண்டதை சுட்டி காட்டினார்.

ஆனால்  தற்பொழுது டாஸ்மாக் கடைகள் எல்லாம் திறந்து அவர்களது உறவினர்கள் தயாரிக்கின்ற மதுபானங்களை விலையை உயர்த்தி எளிய மக்கள் கள்ள சாராயத்தை நாடி செல்கின்ற நிலைமையை உருவாக்கி விட்டதாக தெரிவித்தார்.

கள்ளு கடைகளை திறந்தால் விவசாயிகளுக்கு நன்மைதான் என தெரிவித்த அவர் அதனால் கள்ள சாராயம் இருக்காது எனவும் அது அரசினுடைய கொள்கை முடிவு எனவும் தெரிவித்தார்.

மேலும் தூய்மையான குடிநீரை மக்களுக்கு அரசாங்கம் வழங்க வேண்டும் என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe