ஊட்டியில் கேரட் கழுவும் தொட்டியில் பிணமாக மிதந்த புதுமாப்பிள்ளை

published 2 years ago

ஊட்டியில் கேரட் கழுவும் தொட்டியில் பிணமாக மிதந்த புதுமாப்பிள்ளை

 

ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி கேத்தியில் கேரட் கழுவும் எந்திரங்கள் அதிகளவில் உள்ளன. கேரட் கழுவும் பணியில் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு பீகார் மாநிலத்தை சேர்ந்த ரஞ்சன்மிஸ்ரா(34) என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 3 தினங்களாக இவரை காணவில்லை. நண்பர்கள் அக்கம்பக்கம் தேடி பார்த்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து ஊருக்கு சென்றிருக்கலாம் என நினைத்து விட்டனர்.

நேற்று ஊழியர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கிருந்த கேரட் கழுவும் தொட்டியில் வாலிபர் ஒருவர் பிணமாக மிதந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியான அவர்கள் சம்பவம் குறித்து கேத்தி போலீசில் புகார் கொடுத்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தொட்டியில் பிணமாக மீட்கப்பட்டது மாயமான ரஞ்சன்மிஸ்ரா என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவருடன் பணிபுரிந்த தொழிலாளர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின்போது அவர்கள், ரஞ்சன் மிஸ்ரா தற்கொலை செய்திருக்கலாம் என தெரிவித்தனர். இதனால் அவர் உண்மையிலேயே தற்கொலை செய்து கொண்டாரா? தற்கொலை செய்தால் அதற்கான காரணம் என்ன? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் யாராவது அவரை கொன்று தொட்டியில் வீசினார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த ரஞ்சன் மிஸ்ராவுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது. மனைவியை பீகாரில் விட்டு விட்டு, அவர் மட்டும் ஊட்டியில் தங்கி வேலை பார்த்ததும் விசாரணையில் தெரியவந்தது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe