வெள்ளலூர் குப்பை கிடங்கில் விரைவில் மைக்ரோ கம்போஸ்டிங் சென்டர் - மாநகராட்சி ஆணையர்

published 2 years ago

வெள்ளலூர் குப்பை கிடங்கில் விரைவில் மைக்ரோ கம்போஸ்டிங் சென்டர் - மாநகராட்சி ஆணையர்

கோவை: கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு கொண்டு வரும் குப்பைகளில் தினமும் 300 டன் குப்பைகள் வரை குறைக்க மாநகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் படி 22 மைக்ரோ கம்போஸ்டிங் சென்டர் எனப்படும் நுண்ணுயிர் உரம் உற்பத்தி கூடங்கள் விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளன.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டு பகுதிகளில் இருந்து வெள்ளலூர் குப்பைகிடங்கிற்கு தினமும் 800 டன் முதல் 900 டன் வரை குப்பைகள் சேகரித்து அனுப்பப்படுகின்றன. இதில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்காமல் குப்பைகளை மக்கள் அனுப்புவதால் மீதேன் எரிவாயு உருவாகி வெள்ளலூர் குப்பைகிடங்கில் தீ விபத்தும் அடிக்கடி ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

இதனை தடுக்கும் விதமாகவும், வெள்ளலூர் குப்பைக்கிடங்கிற்கு கொண்டு வரும் குப்பைகளை குறைக்கவும், மாநகராட்சிக்குட்பட்ட கவுண்டம்பாளையம், ஒண்டிப்புதூர், உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் 69 மைக்ரோ கம்போஸ்டிங் சென்டர் என்ற நுண்ணுயிர் மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டன.

அதன் பின் நிர்வாக காரணங்களுக்காக 32 நுண்ணுயிர் மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டன. இதற்கான பணிகள் துவங்கி 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இதில் தற்போது 11 நுண்ணுயிர் மையங்கள் பணிகள் நிறைவடைந்து நல்ல நிலையில் இயங்கி வருகிறது. இந்த மையங்களுக்காக குப்பைகளை வீடு வீடாக சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வாங்க வாங்க 60க்கும் மேற்பட்ட டாடா ஏஸ் வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.

அதில் பச்சை நிறம், நீல நிறம் என குப்பைகளை பிரித்து வாங்க வாகனத்தின் உட்கட்டமைப்பு வசதி மாற்றி அமைக்கப்பட உள்ளது. இதில் பச்சை நிறத்தில் மக்கும் குப்பைகளான காய்கறி கழிவுகள், சாப்பாட்டு கழிவுகள் போன்றவற்றை வாங்கவும், நீல நிறத்தில் மக்காத குப்பைகளான பிளாஸ்டிக் கழிவுகள், கண்ணாடி கழிவுகள் போன்றவற்றை வாங்கவும் பயன்படுத்தப்படுகிறது.

இந்த வாகனங்கள் குப்பைகளை எடுத்து கொண்டு நுண்ணுயிர் மையங்களுக்கு செல்கின்றன. இந்த வாகனங்களில் ஜி.பி.எஸ் கருவிகள் பொருத்தப்பட உள்ளன.

கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் கடந்த 10 ஆண்டுகளாக சுமார் 66 ஏக்கரில் பல லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. இதனை பயோமைனிங் முறையில் அழித்திட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் தினமும் சுமார் 40 டன் வரை குப்பைகள் அழிக்கப்பட்டு வருகிறது.

இதன் பயனாக 16 ஏக்கர் அளவில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் அழிக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள குப்பைகளை அழிக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் கூறியதாவது: கோவையில் தற்போது 11 இடங்களில் மைக்ரோ கம்போஸ்டிங் சென்டர் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம் வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு 30 டன் குப்பைகள் செல்வது தடுக்கப்பட்டுள்ளது.

விரைவில் 22 மைக்ரோ கம்போஸ்டிங் சென்டர்கள் செயல்பாட்டிற்கு வர உள்ளன. இதன்மூலம் வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு 200 டன் முதல் 300 டன் வரை குப்பைகள் செல்வதை தடுக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe