கோவை மாவட்டத்தில் 72 மருத்துவமனைகளை முதலமைச்சர் பிப். 6-ரில் திறந்து வைக்கிறார்: சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்

published 2 years ago

கோவை மாவட்டத்தில் 72 மருத்துவமனைகளை முதலமைச்சர் பிப். 6-ரில் திறந்து வைக்கிறார்: சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்

கோவை: கோவை அரசு மருத்துவமனை மற்றும் இ.எஸ்.ஐ. மருத்துவமனை மருத்துவ மாணவர்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் விழா கோவை இ. எஸ். ஐ. மருத்துவமனையில் உள்ள அரங்கத்தில் நடந்தது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டு 100 மாணவ- மாணவிகளுக்கு வெள்ளை அங்கியினை அணிவித்தார்.

பின்னர் மா. சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- 
"கோவையில் மருத்துவத் துறையில் புதிய கட்டமைப்புகள் அதிக அளவில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் மருத்துவமனைகளுக்கு அதிகளவு நான் வந்துள்ளேன். ஒரு மாதத்திற்கு ஒன்று இரண்டு முறை என இதுவரை 20-க்கும் மேற்பட்ட முறை கோவை வந்துள்ளேன்.

முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், டெல்லி சென்றபோது அங்குள்ள ஆம் ஆத்மி மருத்துவமனையைப் பார்வையிட்டார். அந்த மருத்துவமனையின் கட்டமைப்பைப் பார்த்து தமிழகத்திலும் ஏழை எளிய மக்கள் பயன் அடைய வேண்டும் என முடிவு செய்தார். இதையடுத்து தமிழகம் முழுவதும் 708 மருத்துவமனைகளைக் கட்ட உத்தரவிட்டார்.

அதில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு மருந்து ஆளுநர், ஒரு உதவியாளரை நியமித்துள்ளார். தமிழகத்தில் கோவை மாவட்டத்திற்கு 72 மருத்துவமனைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் மாநகராட்சிக்கு 64 மருத்துவமனைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த 708 மருத்துவமனைகளில் பெரும்பாலான கட்டிடப் பணிகள் முடிவடைந்துவிட்டது. ஒரு சில மருத்துவமனைகளில் மட்டும் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. அதுவும் விரைவில் நிறைவடைய உள்ளது.

மருத்துவத்துறை வரலாற்றில் தமிழகத்தில் முதல் முறையாக 500-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளை முதலமைச்சர் பிப்ரவரி 6-ஆம் தேதி திறந்து வைக்க உள்ளார். இது தவிர மணியக்காரம்பாளையத்தில் ஒரு சுகாதார நிலையக் கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது.

கோவை இ. எஸ். ஐ. மருத்துவமனையில் கடந்த ஆண்டுகளில் 400 புற நோயாளிகள் வந்து கொண்டிருந்தனர். தற்போது அது 1200 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனையில் 4000 ஆக உயர்ந்துள்ளது. 'இன்னுயிர் காப்போம்- நம்மைக் காப்போம்' திட்டத்தில் இ. எஸ். ஐ. மருத்துவமனைக்கு ரூ. 56 லட்சம் உபகரணங்கள் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 500 இடங்கள் விபத்துக்கள் ஏற்படும் ஆபத்தான இடங்களாகக் கண்டறியப்பட்டுள்ளது. அந்த பகுதிகளுக்கு உட்பட்ட 679 மருத்துவமனைகளில் அரசு சார்பில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் விபத்து ஏற்பட்டு 48 மணி நேரத்தில் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக ரூ. ஒரு லட்சம் வழங்கப்படும்.

விபத்து ஏற்பட்டவரை மருத்துவமனையில் அனுமதிப்பவருக்கு ரூ.5,000 ஊக்கத் தொகையும் வழங்கப்படுகிறது. அதன்படி ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 923 பேர் விபத்திலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர். அவர்களுக்காக ரூ.125 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

வருகிற 2-ஆம் தேதி தமிழக முதலமைச்சர் 787 மருத்துவம் சார்ந்த பணியிடங்களுக்குப் பணி நியமன ஆணையை வழங்க உள்ளார். தமிழகம் காச நோயாளிகள் இல்லாத மாநிலமாக உருவாக்கப்படும். குட்கா மீதான தடையை நீதிமன்றம் நீக்கி உள்ளது. ஆனால் தமிழக அரசு போதைப் பொருட்களைத் தமிழகத்திலிருந்து முழுமையாக ஒழிப்பதிலேயே குறிக்கோளாக உள்ளது. இதனால் வியாபாரிகள் கடைகளில் குட்காவை விற்க வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கிறேன். குட்கா மீது தடை விதிக்க மேல்முறையீடும் செய்யப்பட்டுள்ளது. வேண்டுமானால் தமிழக சட்டசபையில் தனித் தீர்மானம் கொண்டு வரப்படும்."
இவ்வாறு அவர் கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe