கோவையில் 770 போதை மாத்திரைகள்  பறிமுதல்:கல்லூரி மாணவர்கள் உட்பட 8 பேர் கைது

published 1 year ago

கோவையில் 770 போதை மாத்திரைகள்  பறிமுதல்:கல்லூரி மாணவர்கள் உட்பட 8 பேர் கைது

கோவை : கோவையில் 770 போதை மாத்திரைகளைப் பறிமுதல் செய்த போலீசார் கல்லூரி மாணவர்கள் உட்பட 8 பேரை கைது செய்தனர்.

கோவையில் கஞ்சா மற்றும் போதைப் பொருளை ஒழிக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். போதைப்பொருள் நடமாட்டம் உள்ள பகுதிகளைக் கண்டறிந்து அதனை விற்கும் நபர்களைக் கைது செய்து வருகின்றனர். இந்நிலையில், கோவை கரும்புக்கடை கருப்பராயன் கோயில் பின்புறம் சிலர் போதை மாத்திரைகளைப் பதுக்கி விற்பனை செய்வதாக கரும்புக்கடை போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் நேற்று அங்குச் சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த கும்பலை மடக்கிப் பிடித்து விசாரித்தனர். 

அதில் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்தனர். அவர்களிடம் சோதனை செய்ததில், அவர்கள் போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்பனை கும்பல் என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட கரும்புக்கடை ஆசாத் நகரைச் சேர்ந்த அப்பாஸ் மொய்தீன்(27), கணபதி விஸ்வநாதபுரத்தை சேர்ந்த பிசிஏ 3ம் ஆண்டு படிக்கும் கல்லூரி மாணவர் டேவிட் மைக்கேல்(20), கணபதி செக்கான் தோட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் எட்வின் சார்லஸ்(19) ஆகிய 3 பேரைக் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 670 போதை மாத்திரைகள், 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்ட 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

காளப்பட்டி ரோட்டில் உள்ள கல்லூரி அருகே போதை மாத்திரை விற்பனை செய்த மயிலாடுதுறையை சேர்ந்த வினோத்குமார்(19) என்பவரை நேற்று பீளமேடு போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 40 போதை மாத்திரை, 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல், ஆர்.எஸ்.புரம் மற்றும் வெரைட்டிஹால் ரோடு போலீசார் தங்கள் பகுதிக்குட்பட்ட பகுதியில் நேற்று சோதனை நடத்தினர். மேட்டுப்பாளையம் ரோடு சென்ட்ரல் தியேட்டர் அருகே வாலிபர் ஒருவர் சந்தேகப்படும் படி நின்றிருந்தார். அவரை பிடித்து சோதனை செய்ததில் அவர் போதை மாத்திரை விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் போதை மாத்திரை விற்ற சிவானந்தாகாலனி டாடாபாத்தை சேர்ந்த டிரைவர் தனசேகரன்(35) என்பவரைக் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 போதை மாத்திரை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

வெரைட்டிஹால் ரோடு போலீசார் நடத்திய சோதனையில், சிஎம்சி காலணி ஆட்டோ ஸ்டாண்ட் அருகே போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட கோவை மணிய தோட்டத்தைச் சேர்ந்த மட்டன் கடை ஊழியர் நவ்சாத்(24), சலீவன் தெருவைச் சேர்ந்த அருள் செல்வம்(25), பொன்னையராஜபுரத்தை சேர்ந்த எலக்ட்ரீசியன் ராம்பிரசாத்(24) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 50 போதை மாத்திரை, 50 கிராம் கஞ்சா மற்றும் ஒரு சிரிஞ்ச், 2 ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோவையில் நேற்று ஒரே நாளில் மாநகர போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 770 போதை மாத்திரை விற்பனை செய்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த போதை மாத்திரை விற்பனை கும்பலின் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என விசாரணை நடத்தி அவர்களைப் பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe