கோவையில் சிங்காநல்லூர் பகுதியில் புதிய மேம்பாலம்!

published 1 year ago

கோவையில் சிங்காநல்லூர் பகுதியில் புதிய மேம்பாலம்!

கோவை: கோவை மாநகரில், திருச்சி சாலை  சிங்காநல்லூர் பகுதியில் அதிக வாகனப் போக்குவரத்து காரணமாக போக்குவரத்து நெரிசல்  ஏற்படுகிறது. இது  நான்கு முக்கிய சாலைகள் சந்திக்கும் இடமாக இருப்பதால் எப்போதும் வாகன நெரிசல் உள்ளது. குறிப்பாக, இரவு நேரங்களில் சிங்கா நல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வரும் தொலைதூர பேருந்துகள் திருச்சி சாலையில் ஒண்டிப்புதூர் நோக்கி திரும்பும் போது போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும்.

இந்த நெரிசலை தவிர்க்க, சிங்காநல்லூர் சந்திப்பில் மேம்பாலம் கட்ட தேசிய நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்துள்ளது. இதே போல்  என்.எஸ்.ஆர் சாலை - சிவானந்தா காலனி சாலை சந்திப்பு, சரவணம்பட்டி - காளப்பட்டி சாலை ஆகிய பகுதிகளிலும் மேம்பாலங்கள் கட்ட திட்டமிடப்பட்டது. இப்போது நெடுஞ்சாலைத்துறை சிங்காநல்லூர் சந்திப்பில் மேம்பாலம் கட்ட ஒப்பந்தம்  செய்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலைத் துறையினர்  கோவைப் பிரிவு உயர் அதிகாரி இது தொடர்பாக  கூறுகையில் ,‘‘தேசிய நெடுஞ்சாலை எண் 181-க்கு ( கோவை - குண்டல்பேட்டை சாலை ) உட்பட்ட சிங்காநல்லூர் சந்திப்பில் ஒண்டிப்புதூர் - ராமநாதபுரம் வழித் தடத்தில் ரூ.141 கோடி மதிப்பில் 2.4 கிலோ மீட்டர் தூரத்துக்கு 17.60 மீட்டர் அகலத்துக்கு 4 வழித் தடமாக மேம்பாலம் கட்டப்பட முடிவு உள்ளது.

இந்த மேம்பாலம் சாந்திசோஷியல் சர்வீஸ் அருகிலிருந்து உழவர் சந்தை வரை கட்டப்படும் என ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தின் பணியானது வருகிற செப்டம்பர் மாதம் 9-ம் தேதி ஒப்பந்தப் புள்ளி திறக்கப்படும். அதில் கலந்து கொண்ட நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு, தகுந்த நிறுவனத்திடம் பாலம் கட்டும் பணி ஒப்படைக்கப்படும்.

அதேபோல், மேட்டுப்பாளையம் சாலையில் தேசிய நெடுஞ்சாலை எண்: 181-க்கு உட்பட்ட  என்.எஸ்.ஆர் சாலை பிரிவு சந்திப்பு அருகிலிருந்து சிவானந்தா காலனி செல்லும் சாலை வரை 2 சிக்னல்களை இருப்பதால் சாலை நெரிசல் உள்ளது. இவற்றை தடுக்க என்.எஸ்.ஆர் சாலை சந்திப்பு- சிவானந்தா காலனி சாலை பிரிவு வரை ரூ.60 கோடி மதிப்பில் 900 மீட்டர் தூரத்துக்கு மேம்பாலம் கட்டப்பட உள்ளது.

என்.எஸ்.ஆர் சாலை பிரிவிலிருந்து தொடங்கி அரசு பேருந்து நிலையம் அருகே வரை இம்மேம்பாலம் கட்டப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தப் புள்ளி அடுத்த மாதம் கோர வாய்ப்புள்ளது. 

தேசிய நெடுஞ்சாலை எண் 948-க்கு ( திண்டுக்கல் - கோவை - கூடலூர் நெடுஞ்சாலை ) உட்பட்ட சரவணம்பட்டி - காளப்பட்டி சாலை சந்திப்புப் பகுதியில் ரூ.80 கோடி மதிப்பில் 1.40 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டது. மெட்ரோ ரயில் திட்டப்பணி மேற்கொள்ளப்பட உள்ளதால், இதுகுறித்து பின்னர் முடிவு செய்யப்படும்’’ என்றார்.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe