கோவையில் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.2.50 கோடி நிலம் விற்பனை

published 1 year ago

கோவையில் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.2.50 கோடி நிலம் விற்பனை

கோவை ; கோவை பீளமேடு ராம்ராஜ் நகரைச் சேர்ந்தவர் சபாபதி மகன் பாலதண்டாயுதம் (50). இவர் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகார் மனுவில் கூறியுள்ளதாவது: எனது தந்தை சபாபதிக்குச் சொந்தமாக காளப்பட்டியில் 11 சென்ட் நிலம் உள்ளது. இதன் தற்போதைய மதிப்பு ரூ.2.50 கோடி ஆகும். கடந்த 1985ம் ஆண்டு எனது தந்தை சபாபதி உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். 

அதன்பின்னர் எங்களது குடும்பத்திற்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து எனது தாயார் கடந்த 2007ம் ஆண்டு நிலத்திற்கான ஆவணங்களை அடகு வைத்து எனது அத்தை சுசீலாமணியிடம் பணம் கடன் வாங்கியுள்ளார். அதன்பிறகு எனது அத்தை எங்களுக்குத் தெரியாமல் கரூரைச் சேர்ந்த குணசேகரன் என்பவருக்கு நிலத்தின் ஒரு பகுதியைப் போலியாகப் பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார். 

இதைத்தொடர்ந்து கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த ராமநாதன் என்பவர் மீதமுள்ள நிலத்திற்குப் போலியான ஆவணங்களைத் தயாரித்து கரூரைச் சேர்ந்த கனகராஜ் என்பவருக்கு காந்திபுரத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார். இதற்குக் கரூரைச் சேர்ந்த பாபு என்பவர் உடந்தையாக இருந்துள்ளார்.

இந்நிலையில், இந்த மோசடியில் தொடர்புடைய எனது அத்தை சுசீலாமணி மற்றும் பாபு இறந்துவிட்டனர். எனவே, எங்கள் குடும்பத்தாரின் ரூ.2.50 கோடி மதிப்பிலான 11 சென்ட் நிலத்தைப் போலி ஆவணங்கள் தயாரித்து பத்திரப்பதிவு செய்து ஏமாற்றிய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டுத் தர வேண்டும். 

இவ்வாறு பாலதண்டாயுதம் புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில், மாநகர குற்றப்பிரிவு போலீசார் நம்பிக்கை மோசடி பிரிவின் கீழ் குணசேகரன், ராமநாதன், கனகராஜ் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe