திருடும் முன் கோவிலில் பூஜை.. சொகுசு பங்களாவில் ஆடம்பரம் : கோவையில் கொள்ளை கும்பல் கைது

published 1 year ago

திருடும் முன் கோவிலில் பூஜை.. சொகுசு பங்களாவில் ஆடம்பரம் : கோவையில் கொள்ளை கும்பல் கைது

கோவை: கோவையில் தொடர் நகை பறிப்பில் ஈடுபட்டு ரூ. 5 கோடியில் சொகுசு பங்களா கட்டி ஜாலியாக வாழ்ந்த தம்பதி உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாநகரில் கடந்த சில நாட்களுக்கு முன் தொடர் செயின் பறிப்பு சம்பவம் நடந்து வந்தது. 

இது தொடர்பாக 10க்கும் மேற்பட்ட வழக்குகள் மாநகர போலீஸ் ஸ்டேன்களில் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நகை பறிப்பு திருடர்களைப் படிக்க உத்தரவிட்டார். உதவி கமிஷனர் ரவி தலைமையில், இன்ஸ்பெக்டர் கண்ணையன், எஸ்.ஐ.,கள் மாரிமுத்து, உமா, போலீசார் கார்த்தி, பூபதி, முத்துராமலிங்கம் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

அவர்கள் மாநகரில் பல்வேறு இடங்களில் சாதாரண உடையில் ரோந்து சென்று கண்காணித்து வந்தனர். 

அப்போது டவுன் ஹாலில், 3 பெண்கள் ஓடிச் சென்று ஆட்டோவில் ஏறி செல்வதை போலீசார் பார்த்தனர். அந்த ஆட்டோ போக்குவரத்து நெரிசலுக்கு இடையே சென்றதால் அவர்களால் உடனே பிடிக்க முடியவில்லை.

பின் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்து அந்த ஆட்டோவின் எண்ணைக் கைப்பற்றினர். ஆட்டோவின் விவரங்களைச் சேகரித்து டிவைரிடம் விசாரித்தனர். 

அப்போது ஆட்டோ டிரைவர் அந்த, 3 பெண்களை அரசு மருத்துவமனையில் இறக்கிவிட்டதாகவும், 100 ரூபாய் வாடகைக்கு, 200 ரூபாய் தந்ததாகவும் தெரிவித்தார். 

இதைத் தொடர்ந்து போலீசார் அரசு மருத்துவமனை மற்றும் பஸ் ஸ்டாப்பில் உள்ள சி.சி.டி.வி., கேமரா காட்சிகளைப் பார்த்தனர். 

அதில் அந்த பெண்கள் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ஒரு பையை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு எதிரே உள்ள பஸ் ஸ்டாப்க்கு வந்ததும், அங்கு ஒரு வாலிபரிடம் போனை வாங்கி பேசி, பஸ் ஏறிச் சென்றதும் பதிவாகி இருந்தது. 

பின் போலீசார் அந்த பெண்களிடம் போனை கொடுத்த நபரை கேமராவில் கண்காணித்தனர். அதில் அவர் அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் உள்ள ஒரு பெண்ணிடம், 15 நிமிடம் பேசி சென்றது இருந்தது.

போலீசார் அந்த வாலிபரின் போட்டோவை எடுத்துக் கொண்டு அரசு மருத்துவமனையில் உள்ள, 4 வார்டிலும் சென்று விசாரித்தபோது அங்கு அனுமதிக்கப்பட்டு இருந்த ஒரு பெண்ணின் உறவினர் என்பதும், அவர் திருப்பூரில் வசித்து வருவதும் தெரிந்தது. 

அவரின் முகவரியைப் பெற்றுக் கொண்டு போலீசார் திருப்பூர் விரைந்தனர். அங்கு அந்த வாலிபரிடம் விசாரித்து அவரது போன் மூலம் அந்த பெண்கள் பேசிய எண்ணைக் கைப்பற்றினர். அந்த போன் எண் உள்ள இடத்தை பார்த்த போது அது மேட்டுப்பாளையத்தில் உள்ள சொகுசு ஓட்டலைக் காட்டியது. 

போலீசார் அங்குச் சென்ற போது அந்த நபர் ஓட்டலை காலி செய்து சென்று விட்டதாக ஓட்டல் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். பின் அந்த போன் எண் யாருடையது என்ற விவரத்தைச் சேகரித்து, தொடர்ந்து அந்த போன் எண்ணை டிராக் செய்த போது பெங்களூரைக் காட்டியது. 

பெங்களூர் செல்ல திட்டமிட்ட போது அந்த போன் எண் சென்னைக்கு வந்தது. சென்னையில் தொடர்ந்து போன் எண் இருந்ததால் தனிப்படை போலீசார் ஜேப்படி கும்பலைப் பிடிக்கச் சென்னைக்கு போலீஸ் வேனில் விரைந்தனர். 

அப்போது போலீஸ் வேன் சேலம் அருகே சென்றபோது விபத்துக்குள்ளாகி போலீசார் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் சேலத்தில் சிகிச்சை பெற்று கோவை திரும்பினர்.

 ஆனாலும் போலீசார் அந்த எண்ணைத் தொடர்ந்து டிராக் செய்து வந்த போது மீண்டும் அந்த கும்பல் கோவை மருதமலைக்கு வந்திருந்தது தெரிந்தது. போலீசார் அங்கு விரைந்து சென்று கோவிலில் இருந்த 3 பெண்களையும், அவர்களுக்கு ஐடியா தந்து வந்த ஒருவரையும் மடக்கிப் பிடித்து வெரைட்டி ஹால் ரோடு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். 

விசாரித்ததில் அவர்கள் பரமக்குடியைச் சேர்ந்த ரவி(47), அவரது மனைவி பழனியம்மாள்(40), உறவினர்கள் வனிதா(37), நதியா(37), ஆகியோர் என்பது தெரிந்தது. அதில், ரவி அவர்களை வழி நடத்தி வந்ததும், 3 பெண்கள் அவரது வழிகாட்டுதலின் படி கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பஸ், கோவில், ரயில்வே ஸ்டேஷன் ஆகிய இடங்களில் நகை பறிப்பில் ஈடுபட்டு வந்தும் உள்ளனர். இதையடுத்து போலீசார் நான்கு பேரையும் கைது செய்தனர். 

அவர்களிடம் இருந்து, 50 பவுன் தங்க நகைகளைப் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த கும்பல் திருடும் முன் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்வது அவர்கள் வழக்கமாக வைத்து இருந்தனர். அவர்கள் நகை திருடிய பணத்தில் பெங்களூரில் 5 கோடி ரூபாயில் வீடு, விலை உயர்ந்த கார் எனச் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்து உள்ளனர். அவர்களின் குழந்தைகள் டாக்டர் மற்றும் இன்ஜினியரிங் படித்து வருவதும் போலீஸ் விசாரணையில் தெரிந்தது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe