தமிழக முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று சிறுவாணியில் கூடுதல் தண்ணீர் திறப்பு

published 2 years ago

தமிழக முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று சிறுவாணியில் கூடுதல் தண்ணீர் திறப்பு

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Gymsw6mPrOK0fU2lrUKwUs

கோவை: கோவை மாவட்டத்திற்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்கிடவும், நீர் சேமிப்பைப் பராமரிக்கவும், குடிநீர் விநியோகத்தை மேலும் அதிகரிக்கவும் கேரளா அரசுக்குத்  தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், அதிக தண்ணீர் திறந்துவிடுமாறு வலியுறுத்தி கடிதம் எழுதியிருந்தார். இதனை அடுத்து கேரளா அரசு சிறுவாணி அணையிலிருந்து கூடுதலாக குடிநீர் பயன்பாட்டிற்குத் தண்ணீரை திறந்துள்ளது.

கோவை மாநகராட்சியில் ஐந்து மண்டலங்களும் 100 வார்டுகளும் உள்ளன. மாநகராட்சி பகுதியில் மட்டும் 6500 தெருக்கள் உள்ளன. மக்கள் தொகை பெருக்கத்தில் சென்னைக்கு அடுத்தப்படியாக கோவை உள்ளது. கோவை மாநகராட்சி பகுதிகளில் மட்டும் சுமார் 20 லட்சம் குடும்பங்கள் வசிக்கின்றன. இது தவிர வேலைக்காக தினமும் வந்து செல்வோர், வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களிலிருந்து வந்து செல்வோர் என சுமார் 10 லட்சம் பேர் உள்ளனர். கோவை மாநகரின் குடிநீர் தேவையை பில்லூர், சிறுவாணி அணைகள் பூர்த்தி செய்கின்றன.

இதில் கோவை மாநகருக்குக் குடிநீர் வழங்கும் முக்கிய அணையாகச் சிறுவாணி அணை உள்ளது. சிறுவாணி அணையிலிருந்து தற்போது 101 எம்.எல்.டி. தண்ணீர் குடிநீர்த் தேவைக்காகக் கிடைக்கிறது. இந்த அணை கேரளா மாநிலம் பாலக்காட்டில் அமைந்துள்ளது. இந்த அணையிலிருந்து எடுக்கப்படும் குடிநீர் மாநகராட்சியில் உள்ள 30 வார்டு மக்களுக்கு வழங்கப்படுவதுடன், வழியோரங்களில் உள்ள ஏராளமான கிராமங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. சிறுவாணி அணை 49.53 அடி உயரும் கொண்டது. ஆனால் கேரளா அரசு 45 அடிக்கு மேல் நீர் தேக்கி வைக்க அனுமதிப்பதில்லை. கடந்த மூன்று வருடங்களாக கேரளா நீர்ப்பாசனத்துறை அணை பாதுகாப்பு காரணம் என்று கூறி சிறுவாணி அணை முழு கொள்ளளவு அடைய அனுமதிப்பதில்லை. அதிலும் குறிப்பாக கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் அணையிலிருந்து அதிகப்படியான நீரினை சிறுவாணி ஆற்றில் திறந்துவிட்டு அணையின் நீர் மட்டத்தை மிக கணிசமாக குறைத்துள்ளது. இது தொடர்பாக தமிழக முதல்வர் கடந்த பிப்ரவரி ௧-ம் தேதி கேரளா முதலமைச்சருக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

இந்நிலையில் அணையில் நீர்மட்டம் குறைந்த காரணத்தினால் சிறுவாணி அணையிலிருந்து குகை வழிப்பாதை வழியாக நாளொன்றுக்கு வரும் நீரின் அளவும்  கேரளா அரசால் குறைத்து வழங்கப்பட்டது. சிறுவாணியின் நீர்மட்டம் 15 அடியாகக் குறைந்துள்ளது. இதனால் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக நாளொன்றுக்கு வழங்க வேண்டிய நீரின் அளவு 100 மில்லியன் லிட்டருக்குப் பதிலாக 50 மில்லியன் லிட்டர் ஆக குறைந்தது.

சிறுவாணி அணையின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருவதால் வரும் நாட்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படவும் வாய்ப்புள்ளது. அவ்வாறு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால் மாநகராட்சி சார்பாக மாற்றுத் திட்டம் செயல்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து  தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உதவி செயற்பொறியாளர் (சிறுவாணி) கூறுகையில், "தமிழக முதலமைச்சர் வலியுறுத்தல் மற்றும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு அன்மையில் ஆய்வு கொண்டு அதிகாரிகளிடம் தெரிவித்ததன் காரணமாகவும் நேற்று இரவு முதல் சிறுவாணி அணையிலிருந்து கேரளா அரசு கூடுதலாகத் தண்ணீரை திறந்துள்ளது. 49 எம்.எல்.டி. தண்ணீர் கிடைத்து வந்த நிலையில் தற்போது 101 எம்.எல்.டி. நீர் கிடைக்கிறது. தற்போது திறக்கப்பட்டுள்ள நீரின் அளவு தொடர்பாக கோவை மாவட்ட கலெக்டர் மற்றும் மாநகராட்சி கமிஷனரிடம் கலந்து ஆலோசனை மேற்கொள்ளப்படும்," என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe