கோவையில் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டதாக எழுந்த புகார்கள்- மாவட்ட ஆட்சியரின் விளக்கம்...

published 2 weeks ago

கோவையில் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டதாக எழுந்த புகார்கள்- மாவட்ட ஆட்சியரின் விளக்கம்...

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :

https://chat.whatsapp.com/LJbd9JNXLHQL1siiXxBROA

கோவை: நேற்றைய தினம் தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் காலை 7 மணி முதல் துவங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. இந்நிலையில் கோவை மக்களவைத் தொகுதியில் கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்தன. கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடையர்பாளையத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் பாஜகவினர் மற்றும் வாக்காளர்கள் சிலர் போராட்டமும் மேற்கொண்டனர்.

இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் இருந்து வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பது என்ற புகாருக்கு கோவை மாவட்ட ஆட்சித் தலைவரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான கிராந்திகுமார் பாடி, விளக்கம் அளித்துள்ளார்.


இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

"கோயம்பத்தூர் மாவட்ட வாக்காளர் பட்டியலில் இருந்து வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டதாகவும், அதனால் அவர்களால் வாக்களிக்க இயலவில்லை என ஊடகங்களில் வெளிவந்த செய்தி தொடர்பான தெளிவாக்கம் 
பின்வருமாறு:


கோயம்பத்தூர் மாவட்டத்தில் 22.01.2024 அன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலில் 30,81,594 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியலை பொறுத்தவரை அக்டோபர் மாதத்தில் வரைவு வாக்காளர் பட்டியலும், அதன் பின்னர் நடைபெறும் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்திற்கு பின்பு, ஜனவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியலும் வெளியிடப்படுகிறது.

ஒவ்வொருமுறை வாக்காளர் பட்டியல், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் வெளியிடப்படும் பொழுதும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியை சார்ந்தவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களது முன்னிலையிலேயே வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தின் பொழுது, வாக்காளர் பட்டியலில் இளம் வாக்காளர்களை சேர்த்தல், இடம் பெயர்ந்த மற்றும் இறந்த வாக்காளர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்தல் ஆகிய பணிகள் நடைபெறும்.


இப்பணியில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் பொருட்டு, வாக்கு சாவடி அலுவலர்கள் மட்டுமன்றி, அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்ட வாக்கு சாவடி நிலை முகவர்களையும் இப்பணியில் ஈடுபடுத்தி, வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இப்பணியில் அனைத்து நிலைகளிலும், வாக்காளர்கள் தங்களின் ஆட்சேபனையை தெரிவிக்க வழிவகை உள்ளது.

இது தவிர, வாக்காளர் பட்டியலின் தூய்மையை உறுதி செய்ய இந்திய
தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் படி தொடர் நடவடிக்கை ஆண்டு தோறும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், வாக்காளர் பட்டியலில் தங்களின் பெயர் இருப்பதை உறுதி செய்து கொள்ளக் கோரி, தேர்தல் ஆணையத்தால், பொதுமக்களுக்கு தொடர் வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது.


எளிய முறையில் வாக்காளர் தனது பெயர் வாக்காளர் பட்டியலில் இருப்பதை உறுதி செய்து கொள்ள எதுவாக, தேசிய வாக்காளர் சேவை தளம் மூலமாகவும் 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மூலமாகவும் பிரத்யேக வசதி ஏற்படுத்தபட்டுள்ளது.

எனவே, இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் படி, உரிய நடைமுறைகளை பின்பற்றியே வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகிறது என்பது இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.


வாக்காளர்களுக்கு இதில் ஏதேனும் கூடுதல் விபரங்கள் தேவைப்படின் அவர்கள் சம்பந்தப்பட்ட வாக்கு சாவடி நிலைய அலுவலரையோ, வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகத்தையோ, மாவட்ட தேர்தல் அலுவலகத்தையோ அணுகலாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw