கோவை: கோவை விமான நிலையத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசியவர், தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும் இதனை தடுக்க தமிழக முதல்வரும் காவல்துறையும் தவறியதாக குற்றம் சாட்டினார்.
மேலும், மொழியை கற்றுக் கொள்வது அவரவர் விருப்பம் எனவும் மொழியை திணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது, "தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 52% அதிகரித்துள்ளது. கூட்டு பாலியல் சம்பவங்கள், ஆசிரியர்கள் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்தல் என அனைத்தும் பீகார், உத்தர பிரதேச மாநிலத்தில் அல்ல தமிழ்நாட்டில் நடந்து வருகிறது. இதனை காவல்துறையும் அதனை கையில் வைத்திருக்கும் தமிழக முதல்வரும் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.
மாநிலம் முழுவதும் போதைப்பொருள் புழக்கம் சாதாரணமாக நடைபெற்று வருகிறது. பள்ளிகளில் கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்கப்படுகிறது. கல்லூரிகளில் வெளிநாட்டு போதைப் பொருள்கள் கிடைக்கின்றன. போதை பொருள் வாங்குபவர்களுக்கு கிடைக்கும் இடம் தெரியும், ஆனால் காவல்துறையினர் கண்டுபிடிக்க முடியவில்லை. இப்படி பெண்களுக்கு எதிரான குற்றங்களும், போதைப் பொருள் சம்பவங்களும் தமிழகத்தின் பெயரை கெடுத்து வருகிறது.
தர்மபுரி மாவட்ட திமுக நிர்வாகி ஐ ஏ எஸ், ஐ பி எஸ் படித்த கலெக்டர் எஸ்பி உள்ளிட் அதிகாரிகளை மிரட்டி வருகிறார். அவர் சொல்வதை தான் கேட்க வேண்டும் என கட்டளை இடுகிறார். இதனை கூட முதல்வர் கண்டிப்பதில்லை.
இந்தியாவில் தெலுங்கானா, பீகார், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பல மாநிலங்களில் இட ஒதுக்கீடும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பை மாநிலங்களே மேற்கொள்ளலாம் எனும் போது தமிழக முதல்வர் ஏன் அதை செய்யாமல் மத்திய அரசை குறை கூறி வருகிறார்.
தொகுதி மறுசீரமைப்பில் மத்திய அரசு தெளிவான விளக்கங்களை அளிக்க வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் 30% அதிகரிக்கும் என்று இருந்தால் பிரச்சனை இல்லை. மக்கள் தொகை அடிப்படையில் தமிழ்நாட்டை விட அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களுக்கு அதிக தொகுதிகள் கிடைப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரி தொகுதி எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். மத்திய அமைச்சர் அமித்ஷா கோவையில் பேசும்போது தமிழகத்தின் தொகுதிகள் குறையாது அதிகரிக்கும் எனக் கூறுகிறார். அது எவ்வளவு அதிகரிக்கும் என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும்.
மத்திய கல்வித்துறை அமைச்சர் திட்டத்தை அமல்படுத்தவில்லை என்றால் நிதி தர முடியாது என கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது. கல்வி என்பது பொதுப் பட்டியலில் உள்ளது. ஒரு திட்டத்தை அமல்படுத்துமாறு வலியுறுத்தலாம் அதனை ஏற்றுக்கொள்வதும் நிராகரிப்பதும் மாநிலங்களின் உரிமையாகும். எதையும் திணிக்க கூடாது. எந்த மொழியையும் கற்றுக் கொள்வது அவரவர் விருப்பமாகும். மொழியை திணிப்பது தான் இங்கு பிரச்சனை. பாட்டாளி மக்கள் கட்சியை பொறுத்தவரை ஒரு மொழி தாய் மொழியை தான் நாங்கள் கொள்கையாகக் கொண்டுள்ளோம் இரண்டு மொழிக் கொள்கையை கொண்ட தமிழ்நாடு இன்று நாட்டில் வளர்ச்சி அடைந்த மாநிலமாக உள்ளது. எந்த பிரச்சனையும் இல்லாத போது ஏன் புதிதாக ஒன்று திணிக்க வேண்டும்.
அதேபோல் திமுக அரசு தமிழ் மொழிக்காக எதையுமே செய்யவில்லை. தமிழ்நாட்டில் தான் தாய் மொழியாம் தமிழ் மொழியை படிக்காமலே பட்டம் பெற முடியும். முனைவர் பட்டம் கூட பெற முடியும். இந்த நிலை மாற்றப்பட வேண்டும்.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் மொழி பிரச்சனையை வைத்து திமுக அரசு அரசியல் செய்து வருகிறது. கல்வியை தனியார் மயமாக்கி அதை ஒரு சேவையாக அல்லாமல் வணிகமாக செய்ததன் விளைவுதான் இதுபோன்ற பிரச்சனைகள். என்னிடம் ஆட்சி பொறுப்பு கொடுத்தால் அனைத்து தனியார் பள்ளிகளையும் அரசு பள்ளிகளாக மாற்றி விடுவேன்.
சீமான் மட்டுமல்ல யாராக இருந்தாலும் பெண்களுக்கு மதிப்பளித்து பேச வேண்டும் என தெரிவித்தார்.