வார இறுதி நாளை முன்னிட்டு 400 சிறப்பு பஸ்கள் இயக்கம்

published 1 year ago

வார இறுதி நாளை முன்னிட்டு 400 சிறப்பு பஸ்கள் இயக்கம்

கோவை:  அரசு விரைவு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் வார இறுதி நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி 4-ந் தேதி (இன்று) வெள்ளிக்கிழமை மற்றும் 5-ந் தேதி (சனிக்கிழமை), 6-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய வார இறுதி நாட்களை முன்னிட்டு 4-ந் தேதி (இன்று) சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாகச் சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை சென்னை மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து பயணம் மேற்கொள்ள 6 ஆயிரத்து 948 பயணிகள் மட்டுமே முன்பதிவு செய்துள்ளனர். 

இருந்த போதிலும் பயணிகள் எந்தவித சிரமம் இன்றி பயணம் மேற்கொள்ள ஏதுவாக சென்னையிலிருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு 4-ந் தேதி தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 200 சிறப்பு பேருந்துகளும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து அதாவது கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற இடங்களிலிருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூருவிலிருந்து பிற இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் என மொத்தம் 400 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாகப் பயணிகளின் தேவைக்கு ஏற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிடத் திட்டமிடப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை பயணம் மேற்கொள்வதற்கு இதுவரை 8 ஆயிரத்து 107 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் தங்களது பயணத்திற்கு முன்பதிவு செய்து பயணிக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

சிறப்பு பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அடுத்த வாரம் 2-வது சனிக்கிழமை மற்றும் சுதந்திர தினத்தையொட்டி தொடர் விடுமுறை காரணமாகப் பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கும் மற்றும் சுற்றுலா தலங்களுக்கும் செல்ல வசதியாகப் பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

மேலும், அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் ஒரு காலண்டர் மாதத்தில் 5 முறைக்கு மேல் ஒரே தடத்தில் பயணம் செய்ய முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளுக்குச் சிறப்புச் சலுகையாக அடுத்து வரும் தொடர் பயணங்களுக்கு அதாவது 6-வது பயணம் முதல் 50 சதவீதம் கட்டணச்சலுகை அளிக்கப்படுகிறது. இதன்படி கடந்த ஜூலை மாதம் 857 பயணிகளுக்கு இச்சலுகை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 


 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe