குட்கா பொருளை போலிசாரே கடைக்குள் வைத்து கடைக்கு சீல் வைத்தார்களா?- வெளியான சம்பவத்தில் உண்மை...

published 1 year ago

குட்கா பொருளை போலிசாரே கடைக்குள் வைத்து கடைக்கு சீல் வைத்தார்களா?- வெளியான சம்பவத்தில் உண்மை...

கோவை: கோவையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை காவல்துறையினரே கடை ஒன்றின் உள்ளே வைத்து பின்னர் அதனை பறிமுதல் செய்வதுபோல் பாவனை காட்டி அந்த கடைக்கு சீல் வைத்துச் சென்றதாக கடை உரிமையாளர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை சரவணம்பட்டி அடுத்த கீரணத்தம் பகுதியைச் சேர்ந்தவர் பஞ்சவர்ணம். இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு உணவு பாதுகாப்பு துறை மற்றும் காவல்துறையினர் இணைந்து திடீரென அவரது மளிகை கடையில் சோதனை நடத்தி குட்கா பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். இந்த நிலையில் மளிகை கடை உரிமையாளர் பஞ்சவர்ணம் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் தான் நடத்தி வரும் மளிகை கடையில் உணவு பாதுகாப்பு அலுவலர் சண்முகம் மற்றும் கோவில்பாளையம் காவல் நிலைய காவலர்கள் இரண்டு பேர், மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சண்முகம் கடந்த நான்காம் தேதி ஆய்வுக்கு வரும் பொழுதே கையில் ஒரு சாக்குப்பையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கொண்டு வந்ததாகவும் அதனை கடைக்கு கொண்டு சென்று பின்னர் வெளியே வந்து அங்கு பறிமுதல் செய்ததாக கூறி புகைப்படம் எடுத்துச் சென்றதாகவும் பின்னர் கடைக்கு சீல் வைத்ததுடன் தங்கள் குடும்பத்தினரை மிரட்டியதாகவும் கூறியுள்ளார். மேலும் பறிமுதல் செய்யாத குட்கா பொருட்களை வெளியிலிருந்து கொண்டு வந்து கடைக்குள் வைத்து புகைப்படம் எடுத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அன்றைய தினம் அந்த கடையில் பதிவு செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகளுடன் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

இதனிடையே அவரது புகாரை முற்றிலுமாக மறுத்துள்ள கோவை மாவட்ட காவல் துறையினர் அந்தக் குறிப்பிட்ட மளிகை கடையில் கடந்த மூன்றாம் தேதியே சோதனை செய்யப்பட்டு குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் முதல் தகவல் அறிக்கையும் அன்றைய தினமே பதிவு செய்யப்பட்டதாகவும் அதன் அடிப்படையில் கடையை சீல் வைப்பதற்காக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி மற்றும் காவல் துறையினர் ஏற்கனவே பறிமுதல் செய்த குட்கா பொருட்களுடன் நான்காம் தேதி அந்த கடைக்கு சென்று புகைப்படம் எடுத்ததாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் மூன்றாம் தேதி சோதனை மேற்கொண்டு குட்கா பறிமுதல் செய்யப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த நிலையில் நான்காம் தேதி நடைபெற்ற சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை வைத்து பொய்யான புகாரை பஞ்சவர்ணம் அளித்துள்ளதாகவும் காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.இருப்பினும் இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடம் புகார் அளித்ததை தொடர்ந்து மீண்டும் 3ஆம் தேதி மற்றும் நான்காம் தேதி நடந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்வதற்காக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளின் முன்னிலையில் கடையின் சீலை அகற்றி ஆய்வு செய்து பின்னர் மீண்டும் அந்த கடைக்கு சீல் வைத்து சென்றனர்.

மேலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்திருக்கும் கடைக்கு முதற்கட்ட அபராதமாக ஐந்தாயிரம் விதிக்கப்படும் எனவும், இந்த கடை குறித்து உணவு பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சண்முகம் தெரிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe