கோவை குறித்து கேள்வி கேட்ட வானதி.. சுட்டிக்காட்டி பதில் அளித்த ஸ்டாலின்! அவைக்குறிப்பு.!

published 11 months ago

கோவை குறித்து கேள்வி கேட்ட வானதி.. சுட்டிக்காட்டி பதில் அளித்த ஸ்டாலின்! அவைக்குறிப்பு.!

கோவை: தமிழக சட்டப்பேரவையில் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசின் மக்கள் தொடர்புத்துறை வெளியிட்ட அவை குறிப்பு பின்வருமாறு:

தமிழ்நாடு சட்மன்றப் பேரவையில், பா.ஜ.க. உறுப்பினர் வானதி சீனிவாசன் கோவை நூலகம் தொடர்பாக கேட்ட கேள்விக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அளித்த பதில்;

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நேற்றையதினம் சட்டமன்றப் பேரவையில் நிதிநிலை அறிக்கையின் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றி இருக்கக்கூடிய உறுப்பினர்களுக்கு எல்லாம் மிகத் தெளிவாக விளக்கமாக, விரிவாக நம்முடைய மாண்புமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்திருப்பது உள்ளபடியே பாராட்டுக்குரிய வகையில் (மேசையைத் தட்டும் ஒலி) அமைந்திருக்கிற காரணத்தால் என்னுடைய வாழ்த்துக்களையும் மனதார நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

நேற்றையதினம் விவாதத்தின்போது சில குறிப்பிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்த வினாவிற்கு விளக்கம் சொல்லியிருக்கிறார். ஆனால், அதேநேரத்தில், பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வைத்த கோரிக்கைக்கு ஏன் பதில் சொல்லாமல் விட்டுவிட்டார் என்று எனக்குப் புரியவில்லை.

அவர் ஒரு கோரிக்கையை வைத்திருந்தார். கோவையில் நூலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பிற்கு நன்றி தெரிவித்துவிட்டு, அது எங்கே அமையவிருக்கிறது, எவ்வளவு நிதி ஒதுக்கப் போகிறீர்கள், எப்போது ஆரம்பிக்கப் போகிறீர்கள், எப்போது அந்தப் பணிகள் முடிவடையும் என்று கேள்விகளைக் கேட்டிருந்தார்கள்.

அது நிச்சயமாக உடனடியாக செயலாக்கத்திற்கு வரும். ஏனென்றால், இந்த ஆட்சி சொன்னதைச் செய்யும், சொன்னதைத் தாண்டியும் செய்யும், சொல்வதைத்தான் செய்யும். (மேசையைத் தட்டும் ஒலி)

மதுரையில் எவ்வாறு உலகத்தரம் வாய்ந்த கலைஞர் நூலகம் குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டிருக்கிறதோ, சென்னையில் கலைஞர் சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை, மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்காக ஏறுதழுவுதல் அரங்கம்

அமையப் பெற்றிருக்கின்றனவோ, இன்னும் சில தினங்களில் நம்முடைய கலைஞர் நினைவிடம் அமையவிருக்கிறதோ, அதேபோல் அதுவும் சொன்னபடி நிச்சயமாக இந்த ஆட்சியில் நடக்கும். ஆனால், வானதி சீனிவாசனுக்கு நான் ஒன்றை மட்டும் உறுதியாகத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

நிச்சயமாக மதுரையில் AIIMS அறிவிக்கப்பட்டதைப்போல் இல்லாமல், (மேசையைத் தட்டும் பலத்த ஒலி) குறிப்பிட்ட காலத்திற்குள் கட்டி முடிக்கப்படும். அதுவும் குறிப்பிட்ட நாளையும் நான் குறிப்பிட விரும்புகிறேன்.

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அது திறக்கப்படும். (மேசையைத் தட்டும் ஒலி) திறப்பு விழா நிகழ்ச்சிக்கு உங்களுக்கு முறையாக அழைப்பு வரும். நீங்களும் வந்து விழாவில் கலந்துகொள்ள வேண்டுமென்று கேட்டு விடைபெறுகிறேன்.

இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள அவைக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe