தடாகம் அருகே யானை தாக்கி ஒருவர் படுகாயம்...

published 1 week ago

தடாகம் அருகே யானை தாக்கி ஒருவர் படுகாயம்...

கோவை: கோவை, தொண்டாமுத்தூர், மதுக்கரை, மருதமலை, தடாகம், சோமையனூர் போன்ற பகுதிகளில் பிரதான தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் ஏற்பட்ட கடும் வறட்சியின் காரணமாக மலையில் இருந்து வனவிலங்குகள் உணவு தேடி சுற்றி உள்ள கிராமப் பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தி வருகிறது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுத்தை வளர்ப்பு விலங்குகளான ஆடு, மாடு, கோழி ஆகியவற்றை வேட்டையாடி சென்றது.

இதைத் தொடர்ந்து பருவ மழை பெய்து வறட்சி நிலை மாறிய பிறகும் இங்கு உள்ள உணவு பொருட்களை ருசி கண்ட யானைகள் வனப் பகுதிக்குள் செல்லாமல் அப்பகுதியிலே முகாமிட்டு உள்ளது. யானை கூட்டம் மற்றும் ஒற்றைக் காட்டு யானை
காலை, மாலை மற்றும் இரவு என அவ்வப்போது திடீர் , திடீரென ஊருக்குள் புகுந்து வீடுகளை உடைத்து அங்கு வைக்கப்பட்டு உள்ள உணவுப் பொருட்கள், வளர்ப்பு விலங்குகள் வைத்து இருக்கும் தீவனங்கள் மற்றும் விவசாய நிலங்கள் பயிரிடப்பட்ட பயிர்கள் ஆகியவற்றை சேதப்படுத்தி வருவது தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.

வனத்துறை அதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வன ஊழியர்கள் மற்றும் வன பாதுகாவலர்களை என குழுக்கள் அமைத்து ஊருக்குள் புகுந்த சேதத்தை ஏற்படுத்தாமல் இருக்க ஏற்பாடுகள் செய்து உள்ள நிலையிலும் ஊருக்குள் தொடர்ந்து  உலா வந்து கொண்டு உள்ளது யானைகள்.

யானைகள் நுழைந்தவுடன் அதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் வனத் துறையினருக்கு தகவல் கொடுத்தவுடன் அங்கு வரும் வனத்துறையினர் அதனை அங்கு இருந்து மட்டும் விரட்டி விட்டு செல்கின்றனர். பின்னர் சிறிது நேரத்தில் மீண்டும் யானை அங்கு வந்து விடுகிறது. அப்பகுதியில் வனத் துறையினர் தங்கி கண்காணித்து வந்தாலும் யானையை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்டாமல் இருப்பதால் அது மீண்டும், மீண்டும் வந்து சேதத்தை ஏற்படுத்துவதாக அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு தடாகம் அருகே உள்ள சோமையனூரில் இருந்து காளையனூர் பகுதியில் மனோகரன் என்பவர் தோட்டத்தில் புகுந்த காட்டு யானையை விரட்டிச் சென்ற வனத் துறையினர். சிறிது நேரத்தில் மீண்டும் அங்கு புகுந்த அந்த ஒற்றைக் காட்டு யானையை வனத் துறையினர் விரட்டினர். இதைத் தொடர்ந்து இன்று அதிகாலை 5.30 மணி அளவில் சோமையனூரில் இருந்து காளையனூர் செல்லும் வழியில் நடைப் பயிற்சிக்கு சென்ற கணேசன் என்பவரை அந்த ஒற்றை காட்டு யானை தாக்கியது. அதில் படுகாயம் அடைந்த அவர் கை உடைந்தது. இதுகுறித்து தகவலின் பெயரில் அப்பகுதியில் கண்காணித்து வந்த வனத்துறை குழுவினர் உடனடியாக அங்கு சென்று அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube

Subscribe
Whatsapp

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Subscribe