ஜாமின் அமைச்சர்களை வைத்து கொண்டு நேர்மையான ஆட்சியா?- கோவையில் வானதி சீனிவாசன் பேட்டி...

published 4 months ago

ஜாமின் அமைச்சர்களை வைத்து கொண்டு நேர்மையான ஆட்சியா?- கோவையில் வானதி சீனிவாசன் பேட்டி...

கோவை: கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள பாஜக நிர்வாகி வீட்டில் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் 'பிரதமரின் மனதின் குரல்' நிகழ்ச்சியினை கட்சியினரோடு சேர்ந்து பார்த்தார்.

இந்நிகழ்வின் போது கட்சியில் உறுப்பினராக சேர்ந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டைகளையும் அவர் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தவர், திமுகவில் மூத்த அமைச்சர்கள் பலர் இருக்கும்போதும், உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பது திமுகவில் உள்ள வாரிசு அரசியலை எடுத்துக்காட்டுவதாகவும்,

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் இந்த விஷயத்தை மக்களிடம் தீவிரமாக பாஜக கொண்டு செல்லும் எனவும் தெரிவித்தார்.

செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது, 'மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மனதின் குரல் நிகழ்ச்சி வாயிலாக பிரதமர் பொதுமக்களிடம் உரையாடி வருகிறார். நாட்டின் சிறிய கிராமங்களிலும், மூளை முடுக்குகளிலும் சிறந்த மனித சேவை செய்பவர்களையும், கண்டுபிடிப்பாளர்களையும், சமூக சேவை செய்பவர்களையும் கண்டறிந்து உலகம் முழுவதும் அறியும் வகையில் குறிப்பிட்டு பேசி வருகிறார்.

நமது கோவையைச் சேர்ந்த பலர் மற்றும் பல நிகழ்ச்சிகள் குறித்து பிரதமர் மனதின் குரல் நிகழ்ச்சியில் குறிப்பிட்டுள்ளார். நான் கோவையைச் சேர்ந்த பல்வேறு நபர்கள் குறித்து பிரதமரின் அலுவலகத்திற்கு பரிந்துரை செய்துள்ளேன். அவர்களைப் பற்றி பிரதமர் பேசியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியோடு பாஜகவின் உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியும் இன்று தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள பூத் கமிட்டி தலைவரின் இல்லத்தில் மனிதன் குரல் நிகழ்ச்சியை இன்று கட்சியினரோடு சேர்ந்து பார்த்ததோடு, உறுப்பினர் அட்டைகளையும் வழங்கியுள்ளேன்.

தமிழகத்தில் அமைச்சரவை மாற்றப்பட்டு உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக மாலை பதவி ஏற்க உள்ளார்.

திமுகவில் அனுபவமிக்க மூத்த அமைச்சர்கள் பலர் இருந்த போதும் முதல்வர் ஸ்டாலினின் மகன் என்கிற அடிப்படையில் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இது திமுகவின் வாரிசு அரசியலையே காட்டுகிறது. திமுகவில் மற்றவர்கள் எத்தனை ஆண்டுகள் உழைத்திருந்தாலும் அவர்களால் சாதாரண உறுப்பினர்களாக மட்டுமே நீடிக்க முடியும். பொறுப்பிற்கும் தலைமைக்கும் வருவதற்கு வாரிசாக இருக்க வேண்டும் என்கிற நிலையை திமுக பொதுமக்களுக்கு எடுத்துக்காட்டி உள்ளது.

மேலும் மாற்றி அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையில், குற்றம் சாட்டப்பட்டு உச்சநீதிமன்றத்தின் நிபந்தனை ஜாமினில் வெளிவந்தவருக்கு மீண்டும் அமைச்சர் பொறுப்பு கொடுப்பதால் அவர் அதிகாரத்தை பயன்படுத்தி விசாரணையை வலுவிழக்க செய்ய முடியும்.

ஊழல் செய்த ஒருவரை மீண்டும் அமைச்சர் ஆக்குவதும், அமைச்சரவையில் மூன்றில் ஒரு பங்கு ஊழல் குற்றச்சாட்டுள்ள அமைச்சர்களை வைத்துக்கொண்டு நேர்மையான ஆட்சி வழங்குவோம் என முதல்வர் ஸ்டாலின் மக்களிடம் கூறுவதையும் எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாததாக உள்ளது.

மேலும் திராவிட மாடல் என்பதற்கு சமூக நீதி, சமத்துவம், பெரியாரின் கொள்கைகள் என பேசும் திமுக அரசு, அமைச்சரவையில் பட்டியலின மக்களின் சார்பாக எந்த பொறுப்பும் வழங்கப்படுவதில்லை. முக்கிய துறைகள் எதுவும் பட்டியலினத்தைச் சேர்ந்த அமைச்சருக்கு வழங்கப்படவில்லை' என விமர்சித்தார்.

மேலும், 'கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருந்தாலும் மத்திய அமைச்சராகவும் முதலமைச்சராகவும் உயர்ந்த பொறுப்புகளை வழங்கும் ஜனநாயகம் மிக்க ஒரே கட்சியாக பாரதிய ஜனதா கட்சி தான் செயல்பட்டு வருகிறது.

திமுகவின் இந்த வாரிசு அரசியல் குறித்து பாஜக தீவிரமாக மக்களிடம் எடுத்துச் செல்லும். 2026 சட்டமன்ற தேர்தலில் இந்த விஷயம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்' எனவும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe