ராகுல்காந்தி கூடலூர் வருகை: பலத்த பாதுகாப்பு

published 2 years ago

ராகுல்காந்தி கூடலூர் வருகை: பலத்த பாதுகாப்பு

 

நீலகிரி: பாரத ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம். பி நாடு முழுவதும் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

பாத யாத்திரையை அவர் கடந்த 7-ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். தொடர்ந்து 3 நாட்கள் கன்னியாகுமரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பாதயாத்திரை மேற்கொண்ட அவர் 11-ஆம் தேதி கேரளாவிற்குச் சென்றார். 11-ஆம் தேதி தொடங்கிய பாதயாத்திரையானது திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர் மாவட்டங்கள் வழியாக 400 கி. மீ தூரத்தைக் கடந்துள்ளது.

இன்று அவர் மலப்புரம் மாவட்டத்தில் பாதயாத்திரை மேற்கொள்கிறார். கேரளாவில் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மீண்டும் தமிழகம் வருகிறார்.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் வழியாக நீலகிரி மாவட்டம் கூடலூர் கோழிப்பாலத்திற்கு வருகிறார். அங்கு அவருக்குத் தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி மற்றும் முக்கிய நிர்வாகிகள் தலைமையில் காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

கட்சியினரின் வரவேற்பை ஏற்றுக்கொள்ளும் ராகுல்காந்தி கோழிப்பாலத்தில் இருந்து 6 கி. மீ தூரம் பாத யாத்திரையாகக் கூடலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு வருகிறார். அவருடன் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் தொண்டர்களும் பாதயாத்திரையாக வருகிறார்கள்.

கூடலூர் புதிய பேருந்து நிலைய பகுதிக்கு வரும் ராகுல்காந்தி, மாலை 4.00 மணிக்கு அங்கு நடக்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று எழுச்சி உரையாற்றுகிறார். பின்னர் கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார்.

தொடர்ந்து அன்று இரவு அவர் கூடலூரில் உள்ள பள்ளி மைதானத்தில் தங்கி ஓய்வெடுக்கிறார். மறுநாள் 30-ஆம் தேதி கூடலூரிலிருந்து கர்நாடகாவுக்குச் செல்லும் ராகுல்காந்தி அங்குத் தனது பாதயாத்திரையைத் தொடங்கவுள்ளார்.

கூடலூர் வனப்பகுதிகளில் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாலும் அவர்கள் அடிக்கடி வன கிராமங்களுக்குள் வருவதாலும், தற்போது ராகுல்காந்தி கூடலூர் வருவதை முன்னிட்டு காவல்துறை பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.

காவல்துறைத் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு, சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிபவர்களைப் பிடித்து விசாரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக ராகுல்காந்தி பாதயாத்திரை மேற்கொள்வதையொட்டி கூடலூரில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளைப் பார்வையிடுவதற்காக மாநில காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி நேற்று கூடலூர் வந்தார்.

பின்னர் கூடலூரில் ராகுல்காந்தியின் வருகையை முன்னிட்டு செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது கூட்டத்தில் நீலகிரி மாவட்டம் முழுவதுமிருந்து தொண்டர்களை அழைத்து வந்து சிறப்பான வரவேற்பு கொடுத்துப் பாத யாத்திரையில் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து அவர் பொதுக்கூட்டம் நடக்கவுள்ள புதிய பேருந்து நிலைய பகுதிக்குச் சென்றார். அங்குப் பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணி மற்றும் இதர பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe