பைக் டாக்ஸி டிரைவர்கள் மீது தாக்குதல் தொடர்பாக போலீசார் விசாரணை

published 1 year ago

பைக் டாக்ஸி டிரைவர்கள் மீது தாக்குதல் தொடர்பாக போலீசார் விசாரணை

கோவை: கோவையில் பைக் டாக்ஸி டிரைவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடந்து வருகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கோவையில் படித்த இளைஞர்கள் சிலர் பகுதி நேரமாக ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டி வருகின்றனர். இதற்கு ஆட்டோ டிரைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அடிக்கடி ஆட்டோ டிரைவர்களுக்கும், பைக் டாக்ஸி ஓட்டுபவர்களுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை ரயில் நிலையம் அருகே ஆட்டோ டிரைவர்கள் சிலர் பைக் டாக்ஸி ஓட்டும் வாலிபரிடம் தகராறில் ஈடுபட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இந்நிலையில், மீண்டும் ஒரு தாக்குதல் சம்பவம் கோவையில் நடந்துள்ளது.

கோவை பீளமேடு காமராஜ் ரோட்டை சேர்ந்தவர் பிரேம் டேவிஸ்பால் (28). இவர் பெங்களூரில் உள்ள ஒரு வங்கியில் வேலை பார்க்கிறார். தற்போது வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் வேலை செய்து வருகிறார். பகுதி நேரமாக ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டி வருகிறார். நேற்று அவர் தனது பைக்கில் நியூ சித்தாபுதூர் ஹரிபுரத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை வழிமறித்த 2 பேர் அவரது செல்போனை பறித்து தகராறு செய்தனர். அங்கு குடிபோதையில் வந்த மேலும் 7 பேர் கொண்ட கும்பல் தகாத வார்த்தைகளால் பேசி பிரேம் டேவிஸ்பாலிடம் வாக்குவாதம் செய்தனர். ஒரு கட்டத்தில் அந்த கும்பல் அவரை தாக்கி விட்டு தப்பி சென்றனர்.

அவ்வழியாக சென்றவர்கள் காயமடைந்த பிரேம் டேவிஸ்பாலை மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இது தொடர்பாக அவர் பைக் டாக்ஸி ஓட்டுவதால் தாக்கப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என காட்டூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe