கோவையில் கொளுத்தும் கோடை வெயிலால் வறண்டு போன குளங்கள்

published 1 year ago

கோவையில் கொளுத்தும் கோடை வெயிலால் வறண்டு போன குளங்கள்

கோவை: மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி ஓடிவரும் நொய்யல் ஆற்றை ஆதாரமாகக் கொண்டு கோவையில் ஆற்றின் இரு கரைகளிலும், 20-க்கும் மேற்பட்ட குளங்களை முன்னோர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.

பருவ காலங்களில் கிடைக்கும் மழைநீரை குளங்களில் சேகரித்து வைத்து ஆண்டு முழுவதும் விவசாயத்துக்கும், மற்ற தேவைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். குளங்களில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் அருகில் உள்ள கிராமங்களின் நிலத்தடி நீருக்கு ஆதாரமாக இருந்து வருகிறது. 

இநிலையில் கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழைக்குப்பின் தற்போது வரை பெரிய அளவில் மழைப்பொழிவு இல்லை. குறிப்பாக கடந்த பிப்ரவரியில் இருந்து வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது. நொய்யலின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் மழைப்பொழிவு இல்லாததால் நொய்யல் ஆற்றில் நீர்வரத்து இன்றி வறண்டு காணப்படுகிறது. இதனால், நொய்யலின் இருகரைகளிலும், அமைந்துள்ள குளங்களில் தண்ணீர் இருப்பு குறைந்து மைதானங்கள் போல காட்சியளிக்கின்றன. 

குறிப்பாக தொண்டாமுத்தூர் வட்டாரங்களில் உள்ள உக்குளம், புதுக்குளம், பேரூர் பெரியகுளம், கோளரம்பதி குளம், சொட்டையாண்டி குட்டை, உள்ளிட்ட குளங்களில் மிகக்குறைந்த அளவே தண்ணீர் காணப்படுகிறது. தண்ணீர் வரத்து இல்லாத நிலையில் வெயிலின் தாக்கத்தால் இருக்கும் நீரும் வேகமாக ஆவியாகி வருகிறது. 

இதனால் பெரும்பாலான குளங்களில் மொத்த கொள்ளளவில் 30 சதவீதத்துக்கும் கீழ் நீர் இருப்பு குறைந்து, குளங்கள் தண்ணீர் இன்றி வறண்டு விளையாட்டு மைதானம் போல் காட்சியளிக்கின்றன. பள்ளித் தேர்வுகள் முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் குளங்களின் நீர் வற்றியுள்ள பரப்புகளில் சிறுவர்கள் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்து வருகின்றனர். 

இதற்கிடையே கோவைக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணை நீர்மட்டம் குறைந்துள்ளது. இதேபோல ஆழியார் அணை நீர்மட்டமும் குறைந்து காணப்படுகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe