அக்ரி க்ளினிக் அமைக்க ரூ.1 லட்சம்..! இன்னும் பல திட்டங்கள் ; கோவையில் 37 கிராம ஊராட்சிகளில் கலைஞரின் வேளாண் வளர்ச்சித் திட்டம்

published 2 years ago

அக்ரி க்ளினிக் அமைக்க ரூ.1 லட்சம்..! இன்னும் பல திட்டங்கள் ; கோவையில் 37 கிராம ஊராட்சிகளில் கலைஞரின் வேளாண் வளர்ச்சித் திட்டம்

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/BD91mw8tExzL8KfiPGY4km

கோவை: கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டமானது தமிழ்நாட்டிலுள்ள 12 ஆயிரத்து 525 கிராம பஞ்சாயத்துகளில் 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்படவுள்ளது. 

இந்த திட்டமானது ஊரக வளர்ச்சித் துறையின் மாபெரும் திட்டமான, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்ட கிராமங்களுடன் இணைந்து செயல்படுத்தப்படுவதால், கிராம அளவில் ஒருங்கிணைந்து செயல்பட முடியும் என்பது இதனுடைய சிறப்பம்சமாகும். 2021-22-ஆம் ஆண்டில் 1997 கிராம பஞ்சாயத்துகளில் ரூ.227 கோடியில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தினுடைய முக்கிய சிறப்பம்சம் கிராம அளவில் அரசுத் துறைகளின் அனைத்து நலத்திட்டங்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்துவதாகும்.

கிராமத்தில் உள்ள தரிசு நிலங்களை சாகுபடிக்குக் கொண்டு வருதல், நீர்வள ஆதாரங்களைப் பெருக்கி சூரிய சக்தி பம்ப் செட்டுகளுடன் நுண்ணீர்ப் பாசன வசதி ஏற்படுத்துதல், வேளாண் விளைபொருட்களை மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்துதல், ஊரக வளர்ச்சித்துறையின் மூலமாக பண்ணைக் குட்டை அமைத்தல் மற்றும் கிராம வேளாண் உட்கட்டமைப்பை மேம்படுத்துதல், 

கால்நடைகளின் நலன் காத்து பால் உற்பத்தியை பெருக்குதல், வருவாய்த்துறையின் மூலம் பட்டா மாறுதல், இ-அடங்கல் சிறு, குறு உழவர்களுக்கு சான்று வழங்குதல், கூட்டுறவு சங்கங்களின் மூலம் அதிக அளவு பயிர்க்கடன்கள் வழங்குதல், பாசன நீர்வழித் தடங்களை தூர்வாருதல் உள்ளிட்ட கிராமப் பொருளாதார மேம்பாட்டிற்காக அனைத்துத் துறை திட்டப் பணிகளையும் ஒருங்கிணைத்து இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டம் கோவை மாவட்டத்தில் 37 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்படுகிறது. இது குறித்து வேளாண்மைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இத்திட்டம் சார்பில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகளுக்கு தலா ரூ.150 மானியத்தில் தென்னங்கன்றுகள் வழங்கல், ரூ.2000 மானியத்தில் பேட்டரி தெளிப்பான் கருவிகள் வழங்கல், விவசாயிகளுக்கு தலா ரூ.250 மானியத்தில் கைத்தெளிப்பான் கருவிகள் வழங்கல், ரூ.334 மானியத்தில் 5 கிலோ துவரை விதைகள் வழங்கல், படித்த வேளாண்மை பட்டதாரிகளுக்கு அக்ரி கிளினிக் அமைப்பதற்காக ரூ.1 லட்சம் மதிப்பில் உதவித்தொகை வழங்கல், 

தோட்டக்கலைத்துறையின் சார்பில் ரூ.5000 மானியத்தில் பயிர் ஊக்கத் தொகை வழங்கல், பழக்கன்றுகள், பராம்பரிய காய்கறி விதைகள் வழங்கல், விவசாயிகளுக்கு தலா ரூ.1000 மதிப்பில் உபகரணங்கள் வழங்கல், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில் உழவர் சந்தை அடையாள அட்டைகள் வழங்கல், விவசாயிக்கு அக்மார்க் ஆய்வக உரிமம் வழங்கல், குளம் தூர்வாரி மேம்படுத்தும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இதனால் விவசாயிகளின் வாழ்வில் பெரும் மாற்றம் ஏற்படும். 

இவ்வாறு அவர் கூறினார்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe