பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரியில் தமிழறிஞர் குருசாமி நூற்றாண்டு விழா

published 1 year ago

பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரியில் தமிழறிஞர் குருசாமி நூற்றாண்டு விழா

கோவை:  கோவை பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் அறிஞரும், பேராசிரியருமான ம.ரா.போ குருசாமி நூற்றாண்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவிற்கு கல்லூரி முதல்வர் பிருந்தா தலைமை வகித்தார். கல்லூரி செயலாளர் கண்ணையன் முன்னிலை வகித்தார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக பாரதிய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

தமிழ் என்பது வகுப்பில் மட்டும் எடுக்கப்படும் ஒரு பாடம் அல்ல. தமிழ் என்பது வாழ்வியல் முறை. தமிழ் என்றால், பெருமிதம் மற்றும் பற்று.  அன்னைத் தமிழும், தமிழரின் கலாச்சாரமும் தான் நம்மை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்கிறது. நாடு சிறப்பான வளர்ச்சியை அடைய வேண்டும் என்றால், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்.

பல்வேறு சிறப்புகளை உடைய தமிழை வளர்த்து, பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்ற பெருமைக்கு சொந்தக்காரர் தமிழ் அறிஞர் ம.ரா.போ. குருசாமி. அவர் காந்தியத்தை பின்பற்றி, இறுதி வரை மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தார். அவர் மறைந்தாலும், அவர் தமிழுக்கு ஆற்றிய தொண்டு, இன்றளவும் அவரை தமிழ் மாணவர்களின் மனதில் வாழ வைக்கிறது. தமிழ் அறிஞர்களின் மனதிலும், தமிழ் மாணவர்களின் மனதிலும் வாழும் அவர் சாகா வரம் பெற்றவர்.

பேராசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு,  தமிழக அரசு அவருக்கு அரசுப் பணி வழங்க முன்வந்தபோதும், அதை மறுத்து, தமிழ் இலக்கியக் கூட்டங்களை நடத்தி, அனைத்து மாவட்டங்ளிலும் நடத்தி, தமிழ்த் தொண்டாற்றினார். தனது இறுதி வரையிலும், காந்திய சிந்தனையில் இருந்து அவர் விலகவே இல்லை. தமிழையும், காந்தியத்தையும் தனது இரு கண்களாக போற்றி பாதுகாத்தார்.

தமிழ் அறிஞர் ம.ரா.போ. குருசாமி பாதுகாத்து வளர்த்த தமிழை, தற்போது தமிழ் பயிலும் கல்லூரி மாணவர்கள்தான் பாதுகாக்க வேண்டும். அவரின் தமிழ்ப் பணியை அடுத்த தலைமுறைக்கு எடுத்துரைக்க வேண்டிய கடமை தமிழ் ஆசிரியர்களுக்கு உண்டு. இந்தக் கடமையை அனைத்து தமிழ் ஆசிரியர்களும் செய்ய வேண்டும். அப்போதுதான்  தமிழ் அறிஞர் ம.ரா.போ. குருசாமி போன்ற மாமனிதர்களை பற்றி அடுத்த தலைமுறையினர் அறிந்துக் கொள்வார்கள் என்றார்.

அதைத் தொடர்ந்து, நமது நம்பிக்கை ஆசிரியர் மரபின் மந்தன் முத்தையா ம.ரா.போ. குருசாமியின் பல்வேறு சிறப்புகளை எடுத்துரைத்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe