இங்கிருந்து ஒரு லட்சம் பேரை அயோத்திக்கு கூப்பிட்டு போங்க- கோரிக்கை வைத்த வானதி..!

published 1 year ago

இங்கிருந்து ஒரு லட்சம் பேரை அயோத்திக்கு கூப்பிட்டு போங்க- கோரிக்கை வைத்த வானதி..!

கோவை: தமிழகத்திலிருந்து ஆண்டுதோறும் ஒரு லட்சம் பேரை அயோத்திக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அழைத்துச் செல்ல வேண்டும் என்று கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் கோரிக்கை வைத்துள்ளார்.

கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து டாடாபாத் பகுதியில் புதிய பூங்கா அமைப்பதற்காக பூமி பூஜை நடைபெற்றது. இதில் பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் குப்பை கொட்டிய இடத்தை பூங்காவாக மாற்ற பூமி பூஜை போட்டு உள்ளோம். மாநகர பகுதிகளில் அதிக பூங்கா உருவாக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக வைத்து இயங்கி வருகிறோம். இந்த பூங்காக்கள் மக்கள் உடற்பயிற்சி, விளையாட உதவிகரமாக இருக்கும். கோவை பா.ஜ.க வினர் ஜனவரி 22 ம் தேதி அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கான அழைப்பிதழ் மற்றும் அக்கோயிலில் பூஜிக்கப்பட்ட அட்சதையை வீடு வீடாக சென்று வழங்கி வருகின்றனர். அந்த அட்சதையை மக்கள் ஆர்வமாகவும் பயபக்தியுடன் வாங்கி கொள்கின்றனர். 
ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்வை பெரிய திரையில் திரையிடவும், பஜனை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மக்களிடம் பெரும் மாற்றத்தை பார்க்கிறோம். 

கலாச்சார அடையாளமான ராமர் பிறந்த இடத்தில் சட்ட பூர்வமாக நியாயமான கோவில் கட்டப்பட்டு உள்ளது கோடிக் கணக்கான மக்களுக்கு உற்சாகம் அளித்து உள்ளது. அயோத்தி செல்ல விருப்பம் தெரிவித்து உள்ளவர்கள் செல்ல மத்திய அரசு தகுந்த நேரத்தில் அறிவிப்பு வெளியிடும். ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் காங்கிரஸ் கட்சி கலந்து கொள்ள போவதில்லை என அறிவித்து உள்ளது. ராமர் கோவில் கட்ட காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு இருந்தும், அவர்களது சுய லாபத்திற்காக தள்ளி போட்டார்கள். 
இது பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சி நிரல் என காங்கிரஸ் சொல்கிறது. ஆனால் ராமர் கோவிலை பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் கட்டவில்லை. இது ராமரை வணங்கும் அத்தனை பேருக்கும் பொதுவான கோவில். இந்த கும்பாபிஷேகத்தை காங்கிரஸ் புறக்கணித்து இருப்பது கண்டனத்திற்குரியது. 

மக்களின் மத உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும். காங்கிரஸ் கட்சியின் அறிக்கை மக்கள் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளது. இதற்காக அக்கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும். ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் சில சமய தலைவர்கள் மாற்றுக் கருத்து சொல்வது இயல்பானது. சமய தலைவர்கள் சொல்வதற்கும், இரு கட்சி சொல்வதற்கும் வித்தியாசம் உள்ளது.
ஸ்ரீ ராமர் கோவில் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. அரைகுறையாக முடிக்கவில்லை. கோவிலை சுற்றி உள்ள பகுதி கட்டுமானங்கள் இரண்டு ஆண்டுகளில் முடிவடையும். ராகுல் காந்தி நடை பயணத்தால் எங்களுக்கு எந்த சிக்கலும் இல்லை. அவருக்கு சிக்கல் இல்லாமல் இருந்தால் சரி. 

கோவையின் தொழில் வளர்ச்சி என்பது முக்கியமானது. சென்னைக்கு அடுத்து கோவை தான் அதிக வருமானம் தருகிறது. தேசிய நெடுஞ்சாலை நிலம் எடுப்பதில் தாமதம், கோவை விமான நிலைய விரிவாக்க பணிகளில் தாமதம், மெட்ரோ பணிகள் தாமதம் என கோவையின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. இதை கேட்க பா.ஜ.க இருக்கிறது. இதனை கண்டித்து மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம். கோவையின் வளர்ச்சி புறக்கணிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் அயோத்திக்கு ஒரு இலட்சம் பேர் செல்ல இந்து சமய அறநிலையத் துறை உதவி செய்ய வேண்டும். திராவிட மாடல் அரசு அனைத்து மக்களையும் சமமாக பார்க்க வேண்டும். பெரும்பான்மை மக்களை பிரித்து பார்க்க கூடாது. பெரும்பான்மை மக்களின் நம்பிக்கைகளுக்கு எதிராக இருக்க கூடாது” எனத் தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe