கோவை: பாரதிய ஜனதா கட்சியின் மாநில நாடாளுமன்றத் தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் தேர்தல் பொறுப்பாளர்கள் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மூத்த தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஆலோசனை கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, நாடாளுமன்ற தேர்தலையொட்டி எந்தெந்த மாதிரியான செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்பது பற்றி பாராளுமன்ற பொறுப்பாளர்களுக்கும் அமைப்பாளர்களுக்கும் குறிப்புகள் அளித்துள்ளதாக தெரிவித்தார். தமிழகத்தை பொறுத்தவரை முதல் அல்லது இரண்டாம் கட்டத்தில் தேர்தல் நடக்கும் எனவும் ஏப்ரல் மூன்றாவது வாரத்திற்குள் தமிழகத்தில் தேர்தல் முடிவடைய வாய்ப்புகள் உள்ளது என தெரிவித்தார். தமிழகத்தில் ஏப்ரல் 20ம் தேதி நாட்களில் தேர்தல் நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது எனவும் கூறினார்.
நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் ஆயிரம் பேசினாலும் அயோத்திய ராம ஜென்ம பூமியில் பாஜகவில் ஏற்கனவே கூறப்பட்டிருக்கின்ற அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு பாஜக உதவிகள் செய்வோம் என்று கூறியதை பிரதமர் மோடி தலைமையிலான அரசு முழு மன திருப்தியோடு நிறைவேற்றி உள்ளது என தெரிவித்தார். இதன் காரணமாக மக்களிடையே நல்ல எண்ணம் உருவாகி இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் மத்திய அரசின் செயல் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டிருந்த பணிகளை இங்கு(தமிழ்நாடு) பார்த்தோம் என தெரிவித்த எச்.ராஜா கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் ஒரு மாறுபட்ட சூழ்நிலைகளாக இந்தத் திட்டங்கள் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் திட்டங்கள் என்பதை மக்கள் புரிந்து கொண்டு இருக்கிறார்கள் எனவும் இது பாஜகவுக்கு சாதகமான சூழ்நிலை என தெரிவித்தார். எனவே இவற்றையெல்லாம் பயன்படுத்தி ஒவ்வொரு வீட்டையும் அணுக வேண்டியது எப்படி என்பது பற்றி இன்றைய தினம் கலந்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும் இன்றைய தினத்தில் இருந்தே கிராமம் செல்வோம் நிகழ்ச்சி துவங்கியிருக்கிறது எனவும் ஒரு வார காலத்திற்குள் ஒவ்வொரு கிராமத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் உள்ளது என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அரசியலுக்கு திசை கொடுத்த ஒரு அரசியல்வாதி என்று சொன்னால் அது அத்வானி எனக் குறிப்பிட்ட அவர், பாஜகவை இந்த நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியதில் மகத்தான பங்கு வகித்தவர் அத்வானி எனவும், அவர் உண்மையாகவே ரத்தினமாக இருந்தார் எனவும் அரசாங்கம் அவருக்கு பாரத ரத்னா விருது கொடுப்பதாக உலகிற்கு அறிவித்துள்ளது என தெரிவித்தார். மேலும் கட்சியின் பல்வேறு மட்டங்களில் இருக்கின்ற பணியாளர்கள் இதன் மூலம் உற்சாகம் பெற்று தேர்தல் பணியாற்ற தங்களை தயார் படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்தார்.
இண்டியா கூட்டணியில் முக்கிய நிர்வாகிகள் வெளியேறி வருவது குறித்து கருத்து கேட்டதற்கு, பதில் அளித்த எச்.ராஜா அப்படி ஒரு கூட்டணி இல்லை என்பதில் ஒரு பெரிய புரிதல் நமக்கு வராமல் இருந்தது எனவும் I.N.D.I.A என்ற புள்ளி வைத்த கூட்டணியாக இருந்ததை தற்பொழுது முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள் எனவும் அதன் கண்வினியரே அதில் இல்லை என்ற அளவிற்கு இருக்கிறது என்றால் அதற்கு குறிக்கோள் இல்லாமல் அமைகின்ற கூட்டணிகள் நிலைக்க முடியாது என்பதுதான் காரணம் எனவும் சாடினார். மோடியை நீக்க வேண்டும் என்பதே அவர்கள் குறிக்கோளாக வைத்திருந்ததாகவும் அதை தவிர்த்து வேறு ஏதேனும் குறிக்கோள்கள் இருக்கிறதா அஜண்டா ஏதாவது இருக்கிறதா என்று கேட்டால் அதுவும் இல்லை அதனால் தற்பொழுது அந்த கூட்டணியே திசை தெரியாமல் போய் உள்ளதாக கூறினார். மேலும் அந்த கூட்டணியில் இருக்கும் முக்கியமான கட்சியின் தலைவரான மம்தாவே காங்கிரஸ் கட்சியினர் 40 சீட்டுகள் கூட ஜெயிக்க மாட்டீர்கள் எனக் கூறுகிறார், என்றால் அவர்களின் லட்சணம் என்னவென்று அவர்களுக்குள்ளேயே தெரிந்து வைத்துள்ளார்கள் எனவும் விமர்சித்தார். பாரதிய ஜனதா கட்சி மட்டும் தான் தமிழகத்தில் வளர்ந்து வரும் கட்சி எனவும் மற்ற கட்சிகள் ஒன்று திகைத்துள்ளது அல்லது பின்னடைவை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் எனவும் அதனால் பாஜக தமிழகத்தில் முன்னேறி வருவதாகவும் இதனால் பாஜகவுக்கு சாதகமான முடிவுகள் வரும் என எதிர்பார்ப்புகள் எனக்கு உள்ளது என தெரிவித்தார்.
நடிகர் விஜய் துவங்கியுள்ள கட்சி குறித்தும் நாடாளுமன்ற தேர்தல் தங்களுக்கு இலக்கு இல்லை என்று அவர்கள் கூறியிருப்பது குறித்தான கருத்து கேட்பிற்கு பதில் அளித்த அவர், அது பற்றி தற்பொழுது விவாதிக்க வேண்டிய தேவை இல்லை எனவும் சட்டமன்றத் தேர்தலில் அது குறித்து விவாதிக்கலாம் எனவும் தெரிவித்தார். மேலும் விஜய் அரசியல் மூலமாக மக்கள் சேவை செய்ய வேண்டும் என்று விரும்புகிறார் என தெரிகிறது என கூறிய ராஜா அதனை வரவேற்பதாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார். தற்பொழுது மத்திய அரசு பற்றியான எதிர்மறை கருத்துக்கள் மக்களிடத்தில் இல்லை எனவும் காங்கிரஸ் கட்சியிலிருந்து ஒருவர் வந்து பிரதமர் ஆவார் என்றெல்லாம் மக்கள் கற்பனையும் செய்வதில்லை எனவும் அது நடக்காது எனவும் விமர்சித்தார். தமிழகத்தில் திமுக ஆளுங்கட்சியாக இருப்பதால் அதனை விமர்சிக்க வேண்டி இருப்பதாகவும் அதிமுக ஆளும் கட்சியும் இல்லை எதிர்க்கட்சியும் இல்லை எனவும் பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி பாஜக எதிர்கட்சி காங்கிரஸ் அந்த காங்கிரஸ் உடன் திமுக கூட்டணி என்பதால் பாஜக திமுக வை அதிகமாக விமர்சிக்க வேண்டி இருப்பதாகவும் அதிமுக அந்த இடத்தில் இல்லை என்பதால் விமர்சனம் கொஞ்சம் கம்மியாக இருக்கலாம் என கூறினார்.
1998 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு பாஜகவின் முன்னாள் தலைவராக இருந்த கிருஷ்ணமூர்த்தி ஜெயலலிதாவை பார்த்தார்கள் என்பதை நினைவு படுத்திய அவர் ஜெயலலிதா பாஜக வெல்லும் என கூறினார் என தெரிவித்தார். பாஜகவுடன் கூட்டணி வைத்தால் சிறுபான்மையினர் ஓட்டுகள் கிடைக்காது என்பதும் சிறுபான்மையினர் ஓட்டுகள் இல்லாமல் ஜெயிக்க முடியாது என்பது எல்லாம் வெறும் கற்பனை எனவுன் கூறினார். கமலஹாசன் திமுகவில் சேரலாம் என கூறப்படுவது குறித்தான கேள்விக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கட்சி துவங்கும் பொழுது ஊழலுக்கு எதிர் என கூறினார் ஆனால் திமுகவில் தேர்தல் நடப்பதற்குள் இருக்கும் இந்த 60 நாட்களுக்குள்ளேயே அரை டஜன் மந்திரிகள் உள்ளே போனாலும் போகலாம் என கூறிய அவர் இதன் மூலம் கமலஹாசன் கட்சி ஆரம்பிக்கும் பொழுது பேசியதெல்லாம் வெற்று வார்த்தைகள் எனவும் தெரிவித்தார். மேலும் கமலஹாசனுக்கு ஊழலை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை எனவும் கமல் ஊழலுக்கு எதிரானவர் இல்லை எனவும் கமல் ஊழலுக்கு உடன் போபவர் விமர்சித்தார்.