GST குறித்து அன்னபூர்ணா உரிமையாளர் பேசியதில் தப்பில்லை- நிர்மலா சீதாராமன்...

published 6 days ago

GST குறித்து அன்னபூர்ணா உரிமையாளர் பேசியதில் தப்பில்லை- நிர்மலா சீதாராமன்...

கோவை: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் கூறுகையில், அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் ஜிஎஸ்டி பற்றி கூறிய கருத்து தொடர்பான கேள்விக்கு, ஜனரஞ்சமாக அவரது பாணியில் அவர் பேசியிருக்கிறார் அதில் தப்பில்லை என்றும் எந்த பொருளுக்கு எவ்வளவு ஜிஎஸ்டி நிர்ணயிக்க வேண்டும் என்று அனைத்து மாநில பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய அமைச்சர்களின் குழுமம் தீவிர ஆய்வு செய்கிறது. ஜிஎஸ்டி சம்பந்தமான எந்த ஒரு முடிவும் எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

தமிழகத்திலிருந்து அதிக ஜிஎஸ்டி பெறப்படுவதாகவும் மத்திய அரசு குறைந்த அளவே தமிழகத்திற்கு திருப்பித் தருவதாகவும் எழுந்த விமர்சனம் குறித்த கேள்விக்கு, தமிழ்நாடு அரசைச் சேர்ந்த நபர்களே இத்தகைய புரியாமையை வெளிப்படுத்துவது தனக்கு பயமாக இருப்பதாகவும் பெறப்படும் வரியில் 50% மத்திய அரசிற்கும் 50% மாநில அரசிற்கும் செல்வதாகவும் கூறிய அவர், மத்திய அரசிற்கு வரும் 50 சதவீதத்திலும் 41%  மாநில அரசுக்கு செல்வதாகவும் கூறினார். பெறப்பட்ட வரியை மாநில அரசுகளுக்கு கொடுப்பதை வரையறுப்பது நிதி ஆணையம் என்றும் நிதி ஆணையம் சொல்வதை கொடுக்க வேண்டிய கடமை தன்னிடம் உள்ளது. அதைக் கூட்டவோ குறைக்கவோ அதிகாரம் தனக்கு இல்லை என்றும் கூறினார். நாங்கள் நிறைய கொடுக்கிறோம் எங்களுக்கு நிறைய வேண்டும் என்றால் நிதி ஆணையத்திடம் முறையிடுங்கள் என்றும் அவர் கூறினார்.

வங்கி கணக்குகளில் குறைந்தபட்ச தொகை இல்லாத போது அபராதம் விதிக்கப்படுவதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு,
இது தவறான செய்தி என்றும் ஏழைகள் பயன்படுத்தும் ஜன் தன் அக்கவுண்ட், கரண்ட் அக்கவுண்ட், சேவிங் அக்கவுண்ட் இவை எதற்கும் அபராதம் கிடையாது என்றும் இத்தகைய அக்கவுண்டுகள் மீது வங்கிகள் அபராதம் விதித்தால் அது தவறு என்றும் மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

விஷ்வகர்மாவிற்கும் ஜாதிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் 18 தொழில்கள் அட்டவணைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும்  யாராக இருந்தாலும் அட்டவணையில் உள்ள தொழில்களை செய்பவர்களுக்கான உதவிகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

திராவிட அரசியல் செய்பவர்கள், தங்களை  ஜாதிக்கு எதிரானவர்கள் என்று கூறிக் கொள்கிறார்கள் என்று கூறிய நிதி அமைச்சர், தமிழ்நாட்டில் குடிநீரில் மலம் கலக்கப்பட்டு இருக்கிறது என்று கூறியதோடு இதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறதா என்று கேள்வியும் எழுப்பினார். ஹிந்தி ஒழிப்பு என்று பேசுபவர்களின் வீட்டைச் சேர்ந்த உறுப்பினர்கள் நடத்தும் பள்ளியில் ஹிந்தி கற்றுக் கொடுக்கப்படுகிறது என்றும் கூறினார்.

மிசோரத்தில் நடைபெற்ற பெரும் கலவரத்தில் ராணுவத்தை அனுப்பி நம் மக்களையே கொலை செய்ய வைத்தது காங்கிரஸ் கட்சி என்றும் இதற்கு முன்பு மணிப்பூரில் நடந்த கலவர காலத்தில் எத்தனை மத்திய அமைச்சர்கள் சென்றிருக்கிறார்கள் என்ற கேள்வி எழுப்பினார். தற்போது இருக்கும் உள்துறை அமைச்சர் மணிபூருக்கு சென்று மூன்று நாட்கள் அங்கேயே இருந்து அனைத்து தரப்பினரையும் சந்தித்தார் என்றும் கூறினார். மிசோரம் கலவரம் குறித்து காங்கிரஸ் கட்சியிடம் கேட்கும்படியும் அவர் கேட்டுக்கொண்டார்.

சென்னை மெட்ரோவில் மத்திய அரசின் பங்களிப்பு குறித்து விளக்கிய நிதி அமைச்சர், சென்னை மெட்ரோவிற்காக மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று பேச வேண்டாம் என்றும் கூறினார்.

அமெரிக்கா சென்றுள்ள ராகுல், பாரத நாட்டிற்கு விரோதமாக செயல்படும் ஆட்களை சந்தித்து பேசியிருக்கிறார் என்று குற்றம் சாட்டினார். தோழமைக் கட்சியின்  செயல்பாடுகள் நாட்டுக்கு விரோதமாக இருக்கிறது என்றால் அது குறித்து கேள்விகேட்க மாட்டீர்களா என்று திமுகவை நோக்கி கேள்வி எழுப்பினார்.

அமெரிக்காவில் ராகுல் காந்தி வெளிப்படுத்தும் கருத்துக்களை காங்கிரஸ் கட்சி ஒத்துக்கொள்கிறதா? என்பது குறித்து காங்கிரஸ் கட்சி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மறைவிற்கு தனது வருத்தத்தை தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube

Subscribe
Whatsapp

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Subscribe