கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி முக்கிய குற்றவாளி- கனகராஜின் சகோதரர் பரபரப்பு பேட்டி...!

published 1 year ago

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி முக்கிய குற்றவாளி- கனகராஜின் சகோதரர் பரபரப்பு பேட்டி...!

கோவை: முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் கோடநாடு பங்களா கொலை கொள்ளை வழக்கு சம்பந்தமாக சிபிசிஐடி அதிகாரிகள் தற்பொழுது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட விபத்தில் உயிரிழந்த ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் இன்று கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் அதிகாரிகள் முன் ஆஜராக வருகை புரிந்தார்.

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சிபிசிஐடி அதிகாரிகள்  ஒரு வாரத்திற்கு முன்பு சம்மன் அனுப்பினார்கள் என்றும் அதனால் இன்று விசாரணைக்கு ஆஜராக வந்துள்ளேன் என்றும் கூறினார்.
கோடநாடு வழக்கு தொடர்பாக ஐஜி சுதாகர் தலைமையில் ஏற்கனவே விசாரணை நடந்தது எனவும் 
தற்போது சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராக வந்துள்ளேன் எனவும் தெரிவித்தார்.  எனது தம்பி ஏற்கனவே எல்லாம் சொல்லியுள்ளார் என தெரிவித்த அவர்,
கோடநாடு வழக்கில் யார் யாருக்கு எல்லாம் தொடர்புள்ளது?, என்ன நடந்தது என எனது தம்பி என்னிடம் சொல்லியுள்ளார் என்றார். அதனை சிபிசிஐடி அதிகாரிகளிடம் சொல்ல உள்ளேன் எனவும் கூறினார்.
கோடநாடு வழக்கில் நீலகிரி, கோவை, திருப்பூர், சேலம் மாவட்டத்தை சேர்ந்த காவல்துறை நபர்கள், அதிமுக முக்கிய பிரமுகர்கள் உட்பட 50 க்கும் மேற்பட்ட நபர்கள் வருகிறார்கள் எனவும் தெரிவித்தார்.
இதில் சம்மந்தப்பட்டவர்கள் அனைவரும் அதிமுகவை சேர்ந்தவர்கள். மாற்றுக்கட்சியினர் இல்லை எனவும் ஒரு சில கூலிப்படையினரும் உள்ளனர் என்றார்.

கோடநாடு சம்பவத்திற்கு பிறகு சங்ககிரியில் எடப்பாடி பழனிசாமி மச்சான் வெங்கடேஷ், சேலம் இளங்கோவன் ஆகியோர் எனது தம்பியிடம் பேரம் பேசியபடி பணம் தரவில்லை என்றார்.
எனது தம்பியை தாக்கியுள்ளனர்‌ எஸ்பிசிஐடி ஒருவரும் சேர்த்து தாக்கியுள்ளார் என தெரிவித்தார்.
2 நாட்கள் கழித்து எங்களது சமுத்திரம் கிராமத்தில் மது குடிக்கும் போது, அதில் விஷம் கலந்தது தெரிந்து எனது தம்பி தப்புகிறார் எனவும்
திரும்ப மீண்டும் அத்தூரில் இளங்கோவன் பணம் தருவதாக அழைத்து, அயோத்தி பட்டிணம் என்ற இடத்தில் உள்ள தென்னத்தோப்பில் மது அருந்தி உள்ளனர் எனவும் கூறினார்.

அதிமுக முக்கிய நபர்கள் அதிக போதை ஏற்றிவிட்டு விபத்தில் பலியானது போல சாலையில் வீசி சென்றுள்ளனர் என்றார்.
இதை நான் அப்போது இருந்தே சொல்லி வருகிறேன் என தெரிவித்த அவர்,
இதற்கு நியாயம் கிடைக்கவில்லை என்றும் 
சிபிசிஐடி மூலம் இன்று நியாயம் கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது என்றார். எனது தம்பி சூட்கேஸில் எடுத்து வந்த ஆவணங்களை  நான் திறந்து பார்க்கவில்லை, 
5 பேக்குகளில் 3 சங்ககிரியில் எடப்பாடி பழனிசாமி மச்சான் வெங்கடேஷிஞமும், 2 பேக் சேலத்தில் ஆத்தூர் இளங்கோவனிடம் ஒப்படைத்துள்ளார் என்றார். இன்று மாலை விசாரணைக்கு பின்னர் என்ன நடந்தது என விளக்கமாக கூறுகிறேன் எனவும் தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, அன்பரசன், சஜீவன், அனுபவ் ரவி, கப்பச்சி வினோத், அத்தூர் இளங்கோவன் ஆகியோர் முக்கிய குற்றவாளிகள் எனவும் மற்றவர்கள் அவர்களுக்கு கீழ் உள்ளவர்கள் எனவும் கூறினார்.

எனக்கு மனநிலை பாதிப்பு இருந்தால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்க வேண்டும்,
இளங்கோவன், சவுக்கு சங்கர் போன்றோர் என்னை மனநலம் பாதிக்கப்பட்டவன் என சான்றிதழ் அளித்திருக்க வேண்டும் என்றார். 
ஏற்கனவே சம்பவம் நடந்த போது என்னிடம் ஊட்டியில் விசாரணை நடத்தினார்கள் என கூறிய அவர், பின்னர் 
சேலத்தில் சுதாகர் தலைமையில் விசாரணை நடந்தது எனவும் ஏடிஎஸ்பி கிருஷ்ண மூர்த்தி, ஐஜி சுதாகர் ஆகியோர் என்னை கடுமையான முறையில் தாக்கினர் எனவும் தெரிவித்தார்.  ஒன்றரை நாட்கள் என்ன நடந்தது என எனக்கு தெரியவில்லை. என்னென்ன வாங்கி எழுதினார்கள் என தெரியவில்லை எனவும் கூறினார். ஜஜி சுதாகரை விசாரிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
சேலம் எஸ்பி, ஓமலூர் டிஎஸ்பி சங்கீதா, எடப்பாடி இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், எஸ்பிசிஐடி முத்துமாணிக்கம் விசாரித்ததில் எல்லாம் வெளியே வரும் எனவும் கூறினார். 2017 க்கு பிறகு கோடநாடு வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் சொத்து மதிப்பு உயர்வு குறித்து இலஞ்ச ஒழிப்பு துறை கவனிக்க வேண்டும் எனவும்
விசாரணை அதிகாரி சொத்து மதிப்பையும் கவனிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

தடயங்கள் அழித்ததாக ஐஜி சுதாகர் என் மீது வழக்கு பதிவு செய்தார், ஆனால்  நான் எந்த தடயத்தையும் அழிக்கவில்லை என்றார்.
எடப்பாடி இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், நீலகிரி எஸ்.பி. முரளி ரம்பா சோதனை செய்ய போது போனை வாங்கி கொண்டனர் எனவும் தெரிவித்தார்.
ஐஜி சுதாகரின் பலவீனத்தை பயன்படுத்தி ஆத்தூர் இளங்கோவன், எடப்பாடி இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் சேர்த்து என் மீது குற்றச்சாட்டை மாற்றியுள்ளனர் என்றார்.
சிபிசிஐடி விசாரணையில் அனைத்தையும் சொல்வேன், விசாரணைக்கு 200 சதவீதம் ஒத்துழைக்க தயார் என்றார்.தற்சமயம் எனக்கு மிரட்டல் இல்லை என தெரிவித்த அவர்,
எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து 2 ஆயிரம் கோடி தருவதாக ஆத்தூர் மணி என்பவர் மூலம் பேரம் பேசினார்கள் என்றார். நான் உண்மை கண்டறியும் சோதனைக்கும் தயார் 
என்னை வெட்டி கூறு போட்டாலும் எதற்கும் தயாராக உள்ளேன் என்றார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe