கோவை லாட்ஜில் தங்கி பலே கொள்ளை திட்டம்.. இளம் பெண் உட்பட 6 பேர் கைது...

published 1 year ago

கோவை லாட்ஜில் தங்கி பலே கொள்ளை திட்டம்.. இளம் பெண் உட்பட 6 பேர் கைது...

கோவை: கோவையில் லாட்ஜில் அறை எடுத்து தங்கி கொள்ளையடிக்க திட்டமிட்ட இளம்பெண் உட்பட 6 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது.
 

கோவை விளாங்குறிச்சி அம்பேத்கர் ரோட்டில் லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 9ம் தேதி இரவு பெண் ஒருவர் வந்தார். அவர் ரூ.1750 தினசரி வாடகையில் அறை புக் செய்தார். மறுநாள் காலை 2 வாலிபர்கள் அந்த அறைக்கு சென்று பெண்ணை சந்தித்து பேசி விட்டு சிறிது நேரத்தில் சென்று விட்டனர். அறை புக் செய்து 24 மணி நேரம் கழித்து லாட்ஜ் வரவேற்பாளர் அந்த பெண்ணிடம் காலி செய்யும் படி கூறினார். அதற்கு அந்த பெண் மேலும் சில நாட்கள் தங்குவதாக தெரிவித்துள்ளார். 

பின்னர் அந்த பெண் அங்கிருந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அங்கு வந்த 2 வாலிபர்கள் அந்த அறையில் தங்கினர். இதனையடுத்து நேற்று முன்தினம் இளம்பெண் உட்பட மேலும் 4 பேர் அங்கு வந்தனர். அதற்கு லாட்ஜ் நிர்வாகத்தினர் ஒரு அறையில் 2 பேர் மட்டுமே தங்க முடியும் என அவர்கள் தங்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் சிறிது நேரத்தில் சென்றுவிடுவதாக தெரிவித்தனர். அதற்கு அனுமதி மறுத்த லாட்ஜ் நிர்வாகத்திடம் அந்த கும்பல் குடிபோதையில் தகராறு செய்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உரிமையாளரிடம் விவரத்தை தெரிவித்தனர். தொடர்ந்து அவர்கள் தங்கியிருந்த அறையை சுத்தம் செய்த ஊழியர்கள் அங்கு அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து ரகசியமாக பீளமேடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு விரைந்து வந்த போலீசார் அங்கிருந்த 6 பேர் கும்பலை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் ஆயுதங்களுடன் லாட்ஜில் அறை எடுத்து தங்கி கொள்ளையடிக்க திட்டமிட்டது தெரியவந்தது. 

இதனை தொடர்ந்து போலீசார் கொள்ளையடிக்க திட்டமிட்ட கோவில்பாளையம் கருப்பராயன் கோயில் தெருவை சேர்ந்த யுகேஷ்(22), சரவணம்பட்டியை சேர்ந்த அப்துல் சமத்(20), நவீன் சக்தி(20), எஸ்எஸ் குளத்தை சேர்ந்த இம்மானுவேல்(21), ஒண்டிப்புதூரை சேர்ந்த ஆகாஷ்(20), காளப்பட்டி நேருநகரை சேர்ந்த ரேகா ஜெனிபர்(18) ஆகிய 6 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஆயுத தடை தடுப்பு சட்டத்தில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe