கோவையில் சிபிஐ அதிகாரிகள் போல் நடித்து டாக்டரிடம் ரூ. 40 லட்சம் மோசடி...

published 8 months ago

கோவையில் சிபிஐ அதிகாரிகள் போல் நடித்து டாக்டரிடம் ரூ. 40 லட்சம் மோசடி...

கோவை: கோவை சாய்பாபா காலனியில் உள்ள அபார்ட்மென்ட்டில் வசிப்பவர் சந்திரசேகர் (70). டாக்டர். எலும்பு முறிவு கிளினிக் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது செல்போன் எண்ணுக்கு அழைப்பு வந்தது. 

அதில் பேசிய மர்ம நபர் டெல்லியில் இருந்து பேசுவதாகவும், உங்களது பெயரில் ஒரு பார்சல் வந்துள்ளது. அதில் போதை பொருள் அனுப்பி உள்ளனர். அது குறித்து உங்களிடம் விசாரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவரை தொடர்பு கொண்ட மற்றொருவர் தன்னை சிபிஐ அதிகாரி என்று தெரிவித்ததுடன், உடனே டெல்லிக்கு வந்து போதைப்பொருள் சம்பந்தமாக விளக்கம் தர வேண்டும், இல்லையென்றால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மிரட்டி உள்ளனர். 

இதனால் அதிர்ச்சி அடைந்த சந்திரசேகர் தனக்கு யாரும் போதை பொருள் அனுப்ப வாய்ப்பில்லை, என தனது விளக்கத்தை அளித்துள்ளார். தொடர்ந்து பேசிய மர்ம நபர்கள், உங்களது வங்கிக் கணக்கில் இருப்பு தொகை எவ்வளவு உள்ளது? என கேட்டுள்ளனர். உடனே சந்திரசேகர் ரூ. 40 லட்சம் இருப்பதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து மர்ம நபர்கள் தாங்கள் கூறும் வங்கி கணக்கிற்கு ரூ.39 லட்சத்து 74 ஆயிரத்து 25ஐ அனுப்பி வைக்க வேண்டும். உங்கள் மீது குற்றமில்லை என நிரூபித்த பின்பு அந்த பணத்தை நாங்களே உங்களது வங்கி கணக்கில் திருப்பி செலுத்தி விடுவோம் என நம்பும்படி தெரிவித்துள்ளனர்.

இதனை நம்பிய சந்திரசேகர் ரூ.39 லட்சத்து 74 ஆயிரத்து 25ஐ அனுப்பி உள்ளார். பின்னர் பல நாட்கள் கழித்தும் அவரது வங்கி கணக்கிற்கு பணம் திரும்ப வரவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த சந்திரசேகர் டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது தான் ஏமாற்றப்பட்டது அவருக்கு தெரிய வந்தது. இது குறித்து அவர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். 

புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe