கோவை: கோவை , திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவுசெய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் 29 நாட்களாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜவுளி உற்பத்தியாளர்களிடம் இருந்து கூலி உயர்வு பெற்று தர வேண்டும் என வலியுறுத்தி இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த ஐந்து நாட்களாக விசைத்தறி உரிமையாளர்கள் குடும்பத்துடன், சோமனூர் பகுதியில் தொடர் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்று கோவை, திருப்பூர் மாவட்டங்களில் விசைத்தறிவு இயங்கும் பகுதிகள் அனைத்தும் கடைகள் அடைக்கப்பட்டது. மேலும் மறுசுழற்சி பஞ்சாலைகளும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களை கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் ஏற்படாமல் தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில் போராட்டத்தை தீவிர படுத்தும் விதமாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தை, காலவரையற்ற உண்ணாவிரத போராட்டமாக மாற்றி நேற்று இரவு முதலே விசைத்தறி உரிமையாளர்கள் தங்களது போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.
அரசு விரைவாக இப்பிரச்சனையில் தலையிட்டு கூலி உயர்வு பெற்றுக் கொடுக்கும் வரை இந்த போராட்டம் தொடரும் என விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து கோவை திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் பூபதி கூறுகையில்
ஜவுளி உற்பத்தியாளர்கள் ஒப்பந்த கூலியை குறைத்து வழங்குவதை கண்டித்து நடந்த 28 நாட்களாக வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக 5 நாட்களாக தொடர் உண்ணாவிரத போராட்டமும் நடைபெற்றது மாநில அரசும் மாவட்ட நிர்வாகங்களும் இதில் உடனடியாக தலையிட்டு நியாயமான கூலி உயர்வை பெற்றுத் தர வேண்டும் கடந்த 28 நாட்களாக நடைபெற்று வரும் போராட்டம் காரணமாக சுமார் ஆயிரம் கோடி ரூபாய் உற்பத்தி இழப்பு ஏற்பட்டு உள்ளது.
கோவை திருப்பூர் மாவட்ட நிர்வாகம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் கூட்டு கமிட்டி கூடி காலவரையற்ற உண்ணாவிரதத்தை துவங்கி உள்ளதாகவும் போராட்டம் வலுவடையும் எனவும் தெரிவித்தார்.